
சிவகாசி அருகே சட்ட விரோதமாக காலி மனையில் செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ பற்றி இருவர் படுகாயமடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள பூசாரித்தேவன் பட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான காலி மனையில் எம் புதுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வாடகைக்கு நிலத்தை பெற்று அதில் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட பெர்க் குளோரைடு என்னும் வேதிப்பொருள் கொண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் ஆன திருப்பதி மற்றும் அவரது உறவினரான நாகராஜ் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
