நீட்டு விலக்கு… நீட்டி முழக்கு..! அந்த ‘ரகசியத்த’ ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொல்லிடுங்க..!

Published:

neet udaya - 2026

கடந்த வாரம் ஒரு செய்தி அனைத்து ஊடகங்களிலும் ஒரு செய்தியைச் சொல்லாமல் சொன்னது..! அது, நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர் என்பதுதான்!

  • நீட் வெற்றி: 7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை!
  • டாக்டராகும் அரசு பள்ளி மாணவிகள்… குவியும் பாராட்டு!

இப்படி, அரசின் ஒதுக்கீட்டில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணத் தொகையில் மருத்துவம் படித்து, டாக்டராகும் தங்கள் கனவு நீட் தேர்வால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்பதை அந்த மாணவர்கள் வெளியுலகுக்குச் சொன்னார்கள்.

தமிழகம் முழுதும் பரவலாக இது போன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்று, டாக்டர் கனவை சாத்தியமாக்கியிருந்தாலும்… அவற்றில் ஓரிரு செய்திகளை இங்கே தருகிறோம்…

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என, இளநிலை மருத்துவப் படிப்பில் (MBBS) மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

neet govt school student2 picture1 - 2026

அதனடிப்படையில், நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

நெல்லை டவுன் கல்லணை பள்ளியைச் சேர்ந்த ஞானலசி, இசக்கியம்மாள் நட்சத்திர பிரியா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், காயத்ரி என்ற மாணவி தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரியிலும், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.

சௌந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம், முதல்கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது.

neet govt school students - 2026

மாநகராட்சி பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது நெல்லை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வின் முதல் நாளிலேயே, ஒரே அரசு பள்ளியை சேர்ந்த ஆறு மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதேபோல நாளை நடைபெறும் கலந்தாய்வு, வரும் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்து மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு பெற்ற நிலையில், முதல் நாள் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் 6 முதல் 12 வரை பயின்ற 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் இடம் கிடைத்துள்ளது!

neet govt school student4 - 2026

நடுக்கல்லூர் அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள மாணவிகள் திவ்யா, விஷ்ணு பிரியா, மாணவர் உதய செல்வன் ஆகிய மூன்று பேரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

neet govt school student1 - 2026

இந்த மாணவர்கள் மூன்று பேரும் கோடகநல்லூரில் உள்ள இலவச நீட் பயிற்சி மையத்தில் மூன்று மாதம் பயின்றதாகவும், அதன்மூலம் எளிதில் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தனர். விவசாயம், கூலி வேலைசெய்யும் குடும்பத்திலிருந்த வந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் எனவும், தங்களின் மருத்துவக் கனவு நிறைவேறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

முன்னதாக, நீட் தேர்வு நடைபெற்ற போது, ‘உதார் விட்ட உதய்’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. #நீட் #உதார்விட்டஉதய் ஆகிய டிவிட்கள், டிரெண்டிங் ஆனது. இதற்குக் காரணமும் இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் ரகசியம் தனக்கு மட்டும் தெரியும் என்றும், அதை எவரிடமும் இப்போது சொல்ல மாட்டோம்… அது எப்படி என்பது தெரிந்துவிட்டால், மற்றவர்கள் அதை தடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்து, மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு ஏமாற்றினார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். அதற்கு ஏற்ப மக்களும் ஏமாந்து வாக்களித்து, என்ன பொய்களைச் சொன்னாலும் கேட்டுக் கொள்வோம் என்று, பொய்களுக்காக வாக்களித்து, தாங்கள் முட்டாள்களே என்று நிரூபித்தனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதனால் நீட் தேர்வு நடந்த போது, இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் பெரும் வைரலானது. ரகசியத்த வெளிய சொல்லக்கூடாதுல அதான் நீட் ரகசியத்த நானே எனக்குள்ளேயே வச்சுக்கிட்டேன்… திமுகவின் ’நீட் ரகசியத்தை’ வச்சு செய்யும் நெட்டிசன்கள்… #NewsJ #DMKFailsTN #BanNeet #AgainstMKStalin #உதாருவிட்டஉதய் #உதாருவிட்டஸ்டாலின் – இது எதிர் ஊடகத்தின் பிரசாரம்.


இந்த நிலையில் தான், தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்று தகவல் இன்று வெளியானது. அதுவும், கடந்த 1 ஆம் தேதியே நீட் விலக்கு கோரும் மசோதாவை அரசுக்கு திரும்ப அனுப்பியிருக்கிறார் ஆளுநர். ஆனால் 3 நாள் கழித்து அதனை இன்று ஆளுநர் அலுவலகமே தெரிவிக்கும் வரை அது குறித்து தமிழக அரசு எதையும் தெரிவிக்காமல் ஏன் மெளனம் காத்தது. இது ஏன் என்பதை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்!

இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி க்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றனர். ஒருவேளை ஆளுநர் அலுவலகம் இன்று இதனை அறிவிக்காமல் போயிருந்தால் இந்த விவகாரம் வெளியே தெரியாமலேயே கூட போயிருக்கும்!

IMG 20220203 WA0063 - 2026

ஆளுநர் தெள்ளத் தெளிவாக தன் கருத்தை பதிய வைத்துள்ளார்.கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களின் நலம் நீட்டிற்கு முன்பு மோசமாக இருந்தது. நீட் தேர்வுக்கு பிறகுதான் அவர்களுக்கான வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே சமூகநீதிக்கு விரோதமானது என்கிறார்.

வேலூர் கிருஸ்துவ கல்லூரியான CMC ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தது. காரணம் 100 மருத்துவ இடத்தில் 84 இடங்களை கிருஸ்த்துவர்களுக்கும், மீதமுள்ள 16 இடங்களை பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கும் வழங்கிவிடும். இதற்கு அந்தக் கல்லூரி தகுதித் தேர்வும் நடத்தியது..!

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அந்த 84 இடங்களில் இடஒதுக்கீடோ அல்லது மாநில உரிமையோ எப்படி நிலைநாட்டப்பட்டது என்று ஒருவர்கூட இதுவரை கேள்வி கேட்டதில்லை. அவர்களின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை ஆளுநர் சுட்டிக் காட்டுகிறார். ஏழை எளிய மாணவர்கள் மீதான பொருளாதார சுரண்டலை நீட் தேர்வுதான் தடுத்து நிறுத்துகிறது என உச்ச நீதிமன்றம் சொன்ன வரிகளையே ஆளுநர் மேற்கோள் காட்டுகிறார்.

neet2 - 2026
neet2

ஆளுநரின் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக சட்டமன்றத்தில் நீட் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சரியான, பாராட்டத் தக்க நடவடிக்கை. ஆளுநர் முன்பாக 2 options உண்டு. ஒன்று உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்புவது அல்லது பந்தை ஜனாதிபதி மாளிகைக்கு தள்ளிவிட்டு தன் பெயரை காப்பாற்றிக் கொள்வது. மேதகு ஆளுந‌ர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்பியுள்ளார்.இது நேர்மையான, சட்டரீதியிலான செயல். தட்டிக் கழிக்க எண்ணாமல் துணிச்சலாக செய்துள்ளார். சட்டம் 2 வகைப்படும். ஒன்று பாராளுமன்றம், அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்படுபவை. மற்றொன்று நீதிமன்றங்களின் தீர்ப்பு. தமிழகத்தில் உச்சமன்ற தீர்ப்பின் மூலம் நீட் செயலாக்கத்தில் உள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தீர்மானம் சட்டப்படி செல்லாது. It is void ab initio. எனவே இனியாவது தமிழக திராவிடியன் ஸ்டாக் அரசு எதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுப்பது மட்டுமே ஒரே வழி… என்று குறிப்பிடுகிறார்.

இப்போது நாமும் அதையே சொல்கிறோம்… நீட் விலக்கு கேட்டு அரசியல் செய்வது, முழுக்க முழுக்க சமூக அநீதியே! ஏழை மாணவர்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலே! டாக்டர் கனவுகளுடன் படிக்கும் ஏழை எளிய மாணவர்களை முடமாக்கி வீட்டில் இருக்க வைத்து, பணம் படைத்தவர்களைச் சேர்த்து, தங்கள் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளும் பணப் பேய்களான மீடியாக்களை வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் தொடர்புள்ளவர்களின் அசுரத்தனங்களே!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img