ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் வியாழக்கிழமை அன்று நடந்த கொடுமை குறித்து முரண்பாடான தகவல்களைத் தரும் நிர்வாகம்:
1.முதலில் அர்ச்சகர்கள்/ மூலமாக வந்த தகவல்படி, ஒருவன் பெரிய கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள் செருப்பை வீசினான்.அவனைப் பிடிக்கப் போன அர்ச்சகர்/பணியாளர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டினான்.
2.”அழுக்கு உடையுடன் வந்த சந்தேகத்துக்குரிய நபர் திருக்கோயிலுக்கு உள்ளே நுழையும் போது அவனது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் உடனே அவனது பையையும் அவனையும் சோதனை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதன் பேரிலே அவன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான். காவல் துறையினர் அவன் யாரென்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்”. இது இணை ஆணையர் பத்திரிக்கை பேட்டி..
3.ஆனால், காவல்துறையிடம் கோவில் நிர்வாகம் கொடுத்த புகார் கடிதத்தில் குலசேகரன் படியில் ஒரு பையை போட்டுவிட்டான்;அதில் அழுக்குத் துணிகள்,சிறிய கத்தி/கத்தரிக்கோல் இருந்தன என்று உள்ளது.
இதில் எது உண்மை? ‘எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும் சாமி’ என்று நாமும் பெருமாளிடம் தான் முறையிட வேண்டுமா??
ஆனால் இந்தச் சம்பவத்தை அடுத்து, பரிகாரமாக பெரிய பெருமாள் சந்நிதியில், “பிராயச்சித்த பஞ்சகவ்ய ப்ரோக்ஷணை” செய்துள்ளார்கள்.
ஒருவன் ஒரு பையைக் கொண்டு போனதுக்கே/படியில் பை தவறி விழுந்ததற்கே பிராயச்சித்த பூஜை செய்வார்களா என்ன? இதிலிருந்தே தெரிகிறது முதலில் வந்த செய்திதான் உண்மை என்று! அதை அப்படியே சொல்ல வேண்டியது தானே..? ஏன் இந்த முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகள். (எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி).
பாகவதர்களே/பக்தர்களே அந்தக் காலத்தில் பெரிய கோவிலுக்கும் / ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கும் வெளியிலிருந்து (வேற்று மதத்தாரிடமிருந்தும் /துரோகி களிடமிருந்தும்) பல பகைகள் வந்தன. அதற்கு நம் முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்து கோவிலையும் / வைணவ சம்பிரதாயத்தையும் காப்பாற்றினர்.
1. தவராசன் படித்துறை மேட்டில், முஸ்லீம் படைகளை எதிர்த்து, 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். (பன்றியாழ்வான் சந்நிதியில் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் முடி திருத்திய கலகம்).
2. பெரிய பெருமாள் சந்நிதிக்குள் முஸ்லிம் படைகளின் தளபதியைப் போகவிடாமல் கவர்ந்து, அவனைக் கோவில் கிழக்கு கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து அவனைக் கீழே தள்ளிக் கொன்று, தானும் விழுந்து உயிர் துறந்த ‘வெள்ளையம்மாள்’ என்னும் வீரமங்கை (அதனால் தான் அந்தக் கோபுரம் ‘வெள்ளைக்கோபுரம்’என்று அழைக்கப்படுகிறது)
3. தள்ளாத 108 ஆவது வயதில் (உலூக்கானின் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற) சில ஸ்ரீவைஷ்ணவர்களோடு, நம்பெருமாளையும், உபயநாச்சிமார்களையும் பல்லக்கில் மறைத்து எடுத்துக் கொண்டு ஜோதிஷ்குடிக்குச்(மதுரை) சென்ற பிள்ளை
லோகாசார்யர். அவர் ஆறு ஆண்டுகள் நம்பெருமாளை ஆனைமலைக் குகையில் வைத்துத் திருவாராதனை செய்து வந்தார். (அங்கேயே பரமபதம் எய்தினார்).
4. பிள்ளை லோகாசார்யருக்கு பின், பல இன்னல்களைக் கடந்து நம்பெருமாளை பல ஊர்களுக்கும் எடுத்துச் சென்று காப்பாற்றிய ஸ்ரீவைஷ்ணவர்கள். திருமலை சந்திரகிரி காட்டு பக்கம் அவர்கள் இருந்த போது அங்கேயும் வந்த முஸ்லீம் படைகளிடமிருந்து தப்பிக்க அடர்ந்த காட்டுக்குள் நம்பெருமாளை எடுத்துச் சென்று காப்பாற்றிய ‘திருத்தாழ்வரை தாசர்’ வம்சத்தைச் சேர்ந்த மூன்று பேர். அவர்களுள் குருகூர் தாசரும், வில்லிபுத்தூர் தாசரும் அங்கேயே பரமபதம் எய்தி விட்டனர். எஞ்சியிருந்த ஒரே நபர் ஸ்ரீராம தாசர் மிகுந்த பக்தியுடனும் வைராக்கியத்துடனும் பல ஆண்டுகள் தனி ஒருவராக நம்பெருமாளைக் காப்பாற்றினார். காட்டில் எப்போதாவது கிடைக்கும் கனி / கிழங்குகளை நம்பெருமாளுக்கு நைவேத்யம் செய்து தானும் உண்டு, சித்தப்பிரமை பிடித்தவராக இருந்தார். 18 ஆண்டுகள் கழித்து நம்பெருமாளை ஸ்ரீரங்கம் கொண்டு சேர்க்கும் வரை அப்படியே இருந்தார்.
5. சோழ மன்னன் ஒருவன் கோவில் கைங்கர்யங்கள் நடத்த இடையூறு செய்ததால், கோபுரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு ஜீயர்கள். (அவர்கள் திரு உருவங்களை வெள்ளைகோபுரம் உள்புறம் இடதுசுவரில் காணலாம்).
6. கிருமிகண்ட சோழனை எதிர்த்து ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்திற்காக தர்சனம் (கண்கள்) இழந்த கூரத்தாழ்வான் / பெரியநம்பி ஸ்வாமி.
7. கிருமி கண்ட சோழன் கொடுமைகளால் வனவாசம் சென்ற ராமானுஜர். அப்போது தான் அவர் மேல்கோட்டை சென்று 12 ஆண்டுகள் ஸ்ரீரங்கத்துக்குச் செல்ல முடியாமல் இருந்தார்.
8. மன்னன் வீரசுந்தரப் பிரம்மராயனின் வைணவ விரோதச் செயல்களால்
ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறி திருக்கோஷ்டியூரில் தங்கியிருந்த பராசர பட்டர்.
9. தொட்டியம் திரு நாராயணபுரம் கோவில் கருவறையில் தீப்பிடித்த போது, தாமும் தம் மனைவியும் தம் பச்சிளம் குழந்தைகள் நால்வரும் பெருமாள்/நாச்சிமார்களின் விக்ரகங்கள் மீது விழுந்து காப்பாற்றிய பிள்ளைத் திருநறையூர் அரையர் (அவர்கள் அனைவரும் தீக்கு இரையாயினர்)
10. இன்னும் எத்தனையோ ஒப்பற்ற தியாகங்களைச் செய்த ஊர் /பெயர் தெரியாத பல உத்தம பக்தர்கள்.
ஆனால் இன்று வெளியிலிருந்து பகை என்று இல்லை. ஆனால உட்பகை அதிகமாகி விட்டது. கோவில் நிர்வாகத்தின் கவனக் குறைவாலும் அலட்சியத்தாலும் பல குறைபாடுகளை / சீர்கேடுகளை கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அவை பற்றி பல்வேறு செய்திகள்/பதிவுகள் ஏற்கனவே வந்துள்ளன.
நாம் உயிர் துறக்க வேண்டாம்!
கண்களை இழக்க வேண்டாம்!!
வனவாசம் / தேசத்தைவிட்டுச் செல்ல வேண்டாம்!!!
நமது சுகமான வாழ்க்கை முறையை மாற்ற வேண்டாம்!!!!
சப்தமாவது செய்யக் கூடாதா? நாலு பேருக்குச் சொல்லக் கூடாதா?? அரசாங்கத்திடம் தகுந்த படி முறையிட்டு நிர்வாக மாற்றம் செய்ய முயற்சிக்கக் கூடாதா??? நியாயத்துக்காக தெருவில் இறங்கி அமைதியாகப் போராடக் கூடாதா????
எல்லாம் அரங்கன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லி வாளா இருப்போர் வீணர்கள் / சோம்பேறிகள் / ஆத்திக நாத்திகர்கள் / மூர்க்கர்களே. அப்படி நம் முன்னோர்கள் இருக்கவில்லை என்பதற்காகத் தான் அவர்கள் செய்த முறைகளை / தியாகங்களைப் பதிவிட்டுள்ளோம்.




