சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்கிற ஆண் யானை இறைப்பணி செய்து வந்தது. 2002 ஆம் ஆண்டு அதற்கு மதம் பிடித்தது. ஆண் யானைகளுக்கு மஸ்து காலங்களில் மதம் பிடிப்பது இயற்கையான விஷயம். ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அந்நிலை நீடிக்கும். அவ்வாறு மாரியப்பனுக்கு மதம் பிடித்தபோது, அதற்கு தேவையான வசதியையும் சிகிச்சையையும் செய்து கொடுக்காமல், அதை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய கூடத்தில் அடைத்து வைத்தனர் அறமற்ற துறையினர். வனத்துறையும் முகாம்களுக்கு எடுத்துச் செல்ல மறுத்துவிட்டது.
அப்போதிலிருந்து, அதாவது 2002-ஆம் ஆண்டிலிருந்து மாரியப்பனை எப்போதும் மூன்று கால்களிலும் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அந்த இரும்புச்சங்கிலியானது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டதாகும் (Oxidised Chain). அந்த மாதிரியான ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட சங்கிலிகளில் விஷத்தன்மை கூடியிருக்கும். அது யானைகளின் கால்களைப் பாதிக்கும். 2011-ஆம் ஆண்டுவரை, ஒன்பது ஆண்டுகள், மாரியப்பனை அப்படியே வைத்திருந்தனர் இரக்கமற்ற அரக்கர்கள். பிராணிகள் நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததனால், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டான் மாரியப்பன்.
மாரியப்பன் அனுபவித்த சித்திரவதையே, தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants (Management and Maintenance) Rules, 2011) உருவாகக் காரணம்.
சமயபுரம் தனியார் யானை
சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்ற ஆணையின் பேரில் கோவில் கோசாலைகளையும் யானைகளையும் ஆய்வு செய்த குழுவினர் சமயபுரம் சென்ற போது, அங்கே கோவில் வாசலில் ஓர் யானை நின்று கொண்டிருந்தது. கடுமையான வெயில்; சொறசொறப்பான தரை. வெய்யிலில் தவித்தபடி அந்தப் பெரிய விலங்கு நின்றுகொண்டிருக்க, அதன் நிழலில் ஒரு நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார் பாகன். அந்த யானை மெல்வதற்குப் பெயருக்கு இரண்டு தென்னை மட்டைகளைப் போட்டுவிட்டுப், போவோர் வருவோரிடம் தன் சார்பாக அந்த யானையைப் பிச்சை எடுக்க வைத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பாதகப் பாகன். அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்தால், ஒரு நாளைக்குக் குறைந்தபக்ஷம் 8 மணிநேரம் அந்த யானையைப் பிச்சையெடுக்க வைக்கிறார் என்கிறார்கள்.
கோவிலில் பணிபுரிந்த மாரியப்பன் விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டு விட்டதால், ஒரு தனி நபர் தன்னுடைய யானையை கோவில் வாசலில் நிற்க வைத்துப் பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாள் முழுவதும் நிற்க வைத்திருப்பதால், அதன் நான்கு கால்களும் புண்ணாகிப் போயிருக்கின்றன. கால்கள் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் கூடப் புண்கள் தெரிகின்றன.
தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants (Management and Maintenance) Rules, 2011) படி, தனியார் வசம் உள்ள யானைகளின் நலனுக்கும் இந்து அறநிலையத்துறை தான் பொறுப்பு. ஆனால் தங்களின் கோவில் வாசலிலேயே நடக்கும் இந்தக் கொடுமையைக் கண்டுகொள்ளாமல் பொறுப்பற்று இருந்திருக்கிறது அறநிலையத்துறை.
குழந்தை மசினியும் அதன் துயரமும்
கடந்த 2008ஆம் ஆண்டு முதுமலைப் பகுதியில் கடுமையான மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் 6 மாதமே ஆன குட்டி யானை ஒன்று அடித்து வரப்பட்டது. அதை மீட்ட வனத்துறையினர் முகாமுக்குக் கொண்டு சென்றனர். மசினியம்மன் கோவிலுக்கு அருகில் மீட்கப்பட்டதால் அதற்கு மசினி என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். முதுமலை முகாமில் அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகச் செல்லமாக வளர்ந்து வந்தது மசினி.
யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை நேரத்தில் அழகாக மணி அடித்து வழிபடும் மசினி. அந்தக் குட்டி யானை மணி அடித்து விநாயகரை வழிபடும் காட்சியைப் பார்க்கவே சுற்றுலாப் பயனிகள் திரள்வர். இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மகிழ்ச்சியாக வளர்ந்து வந்தது மசினி.
நாட்டின் நலனுக்காக பூஜைகளும், யாகங்களும், வேண்டுதல்களும் செய்யாமல் சுயநலனுக்காகவே செய்யும் வழக்கம் உடையவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த உண்மை. குருவாயூர் கோவிலுக்கு அவர் யானையப் பரிசளித்ததும் அவ்வாறான ஒரு வேண்டுதல் தான். அதே போல, 2015ஆம் ஆண்டு 7 வயதே ஆன மசினியை சமயபுரத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
கடுமையான ஆட்சேபங்களை மீறி நிறைவேற்றப்பட்டது உத்தரவு. 7 வயதே ஆன ஒரு குட்டி யானையை, இயற்கைச் சூழலில் தன் குடும்பத்தாருடன் ஆனந்தமாக வளர்ந்து வந்த ஒரு குழந்தையை, வனச்சூழலிலிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் பிரிப்பது எப்பேர்பட்ட கொடுமை! அந்தக் குழந்தை எவ்வளவு துன்பத்தை, பிரிவுத்துயரை அனுபவித்திருக்கும்!
இயற்கைச் சூழலிலிருந்து, நகரத்தின் இரைச்சல் மிகுந்த சூழலுக்குக் கொண்டுவரப்பட்ட மசினி அப்போதிலிருந்தே தனிமைக் கொடுமையையும், பழக்கமில்லாத புதிய பாகனின் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டி ஆயிற்று. இம்மாதிரியான சூழலில் மனதளவில் பாதிப்படையாமல் இருக்குமா?
யானை மிகவும் புத்திசாலியான மிருகம். கிட்டத்தட்ட மனிதனுக்கு இணையான புத்திசாலித்தனம் உடையது. அன்பாகப் பராமரித்தால் குழந்தையை போல அடங்கி நடக்கும். ஆனால் போதிய பயிற்சி இல்லாதவர்களே தற்போது பாகன்களாக இருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக அங்குசங்களையும் மற்ற கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள். அதுவும் இயற்கைச் சூழலிலிருந்தும் குடும்பத்திடமிருந்தும் பிரித்துக் கொண்டு வரப்பட்ட ஒரு குட்டி யானையிடம் எவ்வளவு அன்போடு பழக வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு பாகனிடம் மாட்டிக்கொண்டு மசினி துன்பம் அனுபவித்துள்ளது.
மனதளவில் பாதிக்கப்பட்டதால் தான் நேற்று பாகன் கஜேந்திரனைத் தூக்கிபோட்டு மிதித்துக் கொன்றுவிட்டது. அறமற்றதுறையினரின் அலட்சியத்தால் யானைகள் இறப்பதும், பாகன்கள் கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே தமிழகத்துக் கோவில்களில் நடபெறுகின்றது.
இந்தத் துன்பம் மிகு தொடர்கதையை நிறைவு செய்ய ஹிந்துக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? பசுக்களையே ஒழுங்காக முறையாகப் பாதுகாக்க வக்கில்லாத நமக்கு யானைகளைப் பாதுகாக்க முடியுமா? யோசியுங்கள்…





Please help to eliphant
Eliphant is a child please help that children
where is thrisha.please do something
Very sensible question. Will the authorities take necessary action.