10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இப் பொதுத் தேர்வு கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடத் தேர்வுகளுக்கும் சில பல நாள்கள் விடுமுறை வழங்கி தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், படிப்பதற்கு மிகவும் கடினமான ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு மட்டும் தேர்வுத்துறை விடுப்பு வழங்கவில்லை. எளிதான பாடங்களை படிக்க 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலப் பாடத்துக்கு மட்டும் விடுமுறை அளிக்காதது ஏன் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் கோலோச்சிய நிலையில், ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு விடுமுறை அளிக்கப்படாதது, மறைமுகமாக மெட்ரிக் பள்ளியை ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
10ஆம் வகுப்பு தேர்வு:ஆங்கிலத்துக்கு விடுமுறை இல்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெறுவதில் சிக்கல்?
Popular Categories


