
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அண்மையில் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
குறிப்பாக, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான, ஒரு வகுப்பு அறைக்கு 25 மாணவர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு நெறிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சேலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 -ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கூடத்தை சில நாட்கள் மூடிவைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.
இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த 36 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னகாந்திபுரம் அரசுபள்ளியில் 10 -ம் வகுப்பு பாடம் நடத்தி வரும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த தகவல் அறிந்து பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளார்களாம்.