
பள்ளி திறக்கும் முன், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், சேலம் மாவட்ட செயலர் கமலக்கண்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய மனுவில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும்.
பதவி உயர்வு வழங்கியதால் ஏற்படும் காலி இடங்களில், ஏற்கனவே பணிநிரவலால் கட்டாய மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மாணவ, மாணவியர் நலன் கருதி, கற்பித்தல் பணி தொடங்கும் முன், ஆசிரியர் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.