
தமிழக அரசு மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. 21 நாள் ஊரடங்கால் என்ன பலன்? கொரோனா ஒழிந்து விட்டதா? இனி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு ஏன்? கொரோனா பயங்கரம் இன்னும் உள்ளதா?
உலகம் முழுதும் கொரோனா தன் கோர வெறியாட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் நாம் இன்னும் 2 வது நிலையிலேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்துழைப்பை நல்கியுள்ளார்கள். மேலும் பதினைந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றால், 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததனால் பலன் என்ன ? என்பதை தெளிவாக மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசின் கடமை. இல்லையெனில் மக்கள் பதட்டப்படுவார்கள்.
இன்று வரை தமிழத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173, அதில் 1058 பேர் தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளினால் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். மீதமுள்ள 115 பேரில் 16 பேர் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள். இவர்கள் தவிர 99 பேரில் பலர் 23, மற்றும் 24ம் தேதி விமானத்திலும், அதற்கு சில தினங்களுக்கு முன்பு ரயில்களிலும் (தென்னிந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது) டில்லியிலிருந்து வந்தவர்கள்.அந்த விமானங்கள் மற்றும் சில ரயில்களில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பயணம் செய்தார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் வந்த போது தொற்று பரவியவர்கள் ‘ஒரே தொற்றில்’ அடங்குவார்களா என்பது தெரியவில்லை.
கடந்த 8ம் தேதி அன்று கோவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி மற்றும் மகள் 24ம் தேதி டில்லியிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது. அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைக்கு செய்யும் முன்பே அவர் இறந்து விடுகிறார். அவர் இறந்த பின் அவர் குடும்பத்தினர் சோதனை செய்து கொண்டதில், நேற்று நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது போன்று விமானங்களில், ரயில்களிலும் டில்லியில் இருந்து வந்த ஆனால் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் ஒரே தொற்றில் அடங்குவார்களா என்பது தெரியவில்லை. வெளிநாட்டவர்கள் பலருக்கும் இந்த தொற்று உள்ளதாக தெரிகிறது. இவர்கள் தவிர வெளிநாட்டில் இருந்து வந்த இந்தியர்கள் சிலருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃ பீனிக்ஸ் மாலில் பனி புரிந்த ஒருவரிடம் இருந்து சிலருக்கு தொற்று பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80 % பேரை கண்டுபிடித்து விட்டோம் என்று தமிழக காவல் துறை கூறியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், கலந்து கொண்டவர்களே இன்னும் 20 % மீதமுள்ள நிலையில், அடையாளம் கண்டவர்களின் தொடர்புகளில் இருந்தவர்களில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்பதை எண்ணவே அச்சமாய் உள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் எண்ணிக்கையை கண்டு மக்கள் மலைப்பாக எண்ணிவிட கூடாது. இந்த அதிகமான எண்ணிக்கை தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று அதன் பிறகு அவர்களின் தொடர்புகளால் ஏற்பட்ட தொற்று என்பதை தெளிவாக சொல்வதன் மூலமே, சமூக பரவல் தமிழகத்தில் இல்லை என்பதை மக்கள் உணர்வார்கள். மேலும் தமிழக அரசு சமூக பரவலை தடுத்து நிறுத்தியுள்ளது என்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பார்கள்.
தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றது குறித்தோ, அதில் கலந்து கொண்டவர்கள் குறித்தோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. செய்ய முடியாது. மதரீதியான விமர்சனமாகவும் இதை கருத கூடாது. ஆனால், அதன் பிறகு ஏற்பட்டிருக்கிற நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டியது, ஒட்டுமொத்த மாநில நலனிற்கு மிக அவசியம். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு வந்தவர்கள், அதன் பிறகு பல்வேறு ஊர்களில், இஸ்லாமியர்களிடையே தான் எ மதப்பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்பதால், அதிகமாக அவர்களிடையே தான் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதை அவர்களின் நலன் கருதி, புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மதரீதியாக அவர்களை விமர்சனம் செய்கிறார்கள் என்பது போன்ற தவறான புரிதல் இருந்தால் அதை கைவிட்டு விட்டு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழக அரசு மிக சிறப்பாகவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி வருகிறது என்றாலும், தொற்றுள்ளவர்களை அடையாளம் காண்பதில் மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதோடு தொற்றின் பரவல் குறித்து வெளிப்படை தன்மையோடு செயல்படுவதன் மூலமே, மக்கள் அச்சப்படாமல், நம்பிக்கையோடு அரசுக்கு ஒத்துழைப்பை கொடுப்பார்கள்.
- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர், தமிழக பாரதிய ஜனதா கட்சி.


