spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும்!

மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும்!

- Advertisement -
patel Gandhi nehrujpg
patel Gandhi nehrujpg

மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும் ..
– திருப்பூர் கிருஷ்ணன்

நாம் பெறும் அறிவு என்பதே ஆங்கில மொழியறிவு தான். வேறு துறைசார்ந்த அறிவு அல்ல. முதலில் ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்று நாம் துறைசார்ந்த அறிவுக்குப் போவதற்குள் பலப்பல ஆண்டுகள் நம் வாழ்வில் வீணாகிவிடுகின்றன.

ஒருவேளை நாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் நம் தாய்மொழியிலேயே கல்வி கற்றிருந்தால், வெறும் ஆங்கிலத்தைப் பயில்வதற்காக வீணாக்கிய நாட்களெல்லாம் பயனுள்ளவை ஆகியிருக்கும். நம் பாரதம் எல்லாத் துறைகளிலும் இன்னும் கணிசமான அளவு முன்னேறியிருக்கும்.

*மகாத்மா காந்தி தாய்மொழி பற்றியும் கல்வியில் அதன் அத்தியாவசியம் பற்றியும் மிக ஆணித்தரமான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் காந்தியின் தாய்மொழிக் கல்வி தொடர்பான கருத்துகளால் பெரிதும் கவரப் பட்டிருந்தவர் கம்ப ராமாயண அறிஞரான ரசிகமணி டி.கே. சி. தமிழ்வழிக் கல்வியைப் பெரிதும் வற்புறுத்தினார் டி.கே.சி.

`வான சாஸ்திரம் ஆகாயத்தில் இருக்கிறது. அது என்ன, ஆங்கிலத்திலா இருக்கிறது? தாவரவியலும் விலங்கியலும் கானகத்தில் இருக்கின்றன. அவை ஆங்கிலத்திலா இருக்கின்றன?

நிலவியல் பூமியில் இருக்கிறது. வரலாறு கடந்த காலத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தில் எந்த அறிவியலும் இல்லையே? பிறகு ஏன் இந்தத் தேவையற்ற ஆங்கில மோகம்? தாய்மொழியில் கல்வி கற்றாலன்றி இந்தியர்கள் கடைத்தேற மார்க்கமில்லை!` என்பது டி.கே.சி. கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டின் வேர் அவருக்கு மகாத்மாவிடமிருந்து கிடைத்ததாகத் தான் இருக்க வேண்டும். அல்லது மகாத்மாவிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த அவரது உற்ற நண்பர் கல்கியின் மூலம் அவரிடம் இந்தச் சிந்தனை தோன்றியிருக்கலாம்.

ஆங்கிலவழிக் கல்வியை அறவே வெறுத்தார் மகாத்மா. ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டிருப்பதைப் போல, ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டிருப்பதும் மிக மோசமானது என்று அவர் கருதினார்.

ஆங்கில வழிக் கல்வி ஆங்கிலக் கலாசாரத்தையும் ஆங்கில நடைஉடை பாவனைகளையும் நம்மிடையே புகுத்தும் என்றும் அது நம் இந்தியப் பண்பாட்டை மெல்ல மெல்லச் சீர்குலைக்கும் என்றும் பின்னாளில் இந்தியா இன்னொரு சிறிய இங்கிலாந்தாக உருவாகி விடும் என்றும் அவர் கருதினார்.

தாய்மொழிக் கல்வி மூலமே இந்தியப் பண்பாட்டை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய முடியும் என அவர் மனப்பூர்வமாக நம்பினார்.

தென்னாப்பிரிக்காவில் அவருக்குக் கிட்டிய மோசமான அனுபவங்கள், அவரது அரசியல் தொடர்பான பார்வைகளை மட்டும் மாற்றவில்லை. கல்வி தொடர்பான அவரது சிந்தனைப் போக்கையும் கூட அது பெருமளவில் மாற்றியது.

தொடக்கத்தில் மேற்கத்திய ஆங்கில வழிக் கல்வியை அவர் ஆதரித்தார் என்பது உண்மைதான். அதன் மூலமே மக்கள் மேம்பாடு அடையமுடியும் என்று கூட அவர் நம்பியிருந்தார். இதை அவர் ஒப்புக்கொண்டுமிருக்கிறார்.

தமக்குக் கிடைத்துள்ள அறிவுச் செழுமைக்கெல்லாம் காரணம், தான் மேற்கத்தியக் கல்வியை ஆங்கில வழியில் கற்றதுதான் என்று கூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் காலப் போக்கில் அவர் கருத்தோட்டத்தில் மாபெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.

வெளிதேசத்திலிருந்து இந்தியா திரும்பிய அவர், தமது முப்பதாம் வயதை ஒட்டிய காலங்களில் ஆங்கிலவழிக் கல்விக்கு நேர் எதிரான கருத்துகளைச் சொல்லத் தொடங்கினார்.

கோடிக்கணக்கான மக்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்டுவதன் மூலம் நாம் அம்மக்களையெல்லாம் தொடர்ந்து அடிமைப் புத்தியோடு இருக்குமாறு செய்துவிட்டோம், இந்தப் போக்கிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டியது மிக அவசியம் என அவர் கடுமையாக எச்சரிக்கத் தொடங்கினார்.

`நீதிமன்றங்களில் ஆங்கிலமே கோலோச்சுவதைப் பார்க்கிறேன். ஆங்கிலம் தெரியாத, ஏன் ஆங்கிலம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லாத ஒரு பாமரன் எப்படி நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளைப் புரிந்து கொள்ள முடியும்? நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

நம் தேசத்தின் எல்லா ஆவணங்களும் அன்னிய மொழியான ஆங்கிலத்திலேயே உள்ளன. இந்த நிலைமை ஏன்? இதை எப்போது மாற்றப் போகிறோம்?

நம் தேசத்தில் கொண்டாடப்படும் சிறந்த நாளிதழ்கள் பலவும் ஆங்கில நாளிதழ்களாகவே காணப்படுகின்றனவே? இந்நிலைமை மாறுவது எப்போது? அப்படி மாறினால் தானே நாம் பெறவிருக்கும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமாக இருக்கும்?` என்று சுதந்திரத்திற்கு முன்பே கேட்டார் அவர்.

இவ்வித நிலைமை இருப்பது குறித்து அவர் ஆங்கில ஆட்சியைக் குறை சொல்லவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஆள வந்தவர்கள். தங்களால் ஆளப்படுபவர்கள் தங்களைப் போல் மாற வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான்.

ஆனால் நம் இந்தியர்களுக்கு எங்கே போயிற்று புத்தி? அவர்கள் ஏன் கல்வி கற்கும் மொழி தொடங்கி ஒவ்வொன்றிலும் ஆங்கிலேயர்களைக் காப்பி அடிக்க வேண்டும்?

ஆங்கில வழிக் கல்வியையும் ஆங்கிலேயப் பாணியில் அமைந்த கல்வியையும் முற்றிலுமாக ஒதுக்கினால்தான் நாம் உண்மையான சுதந்திரம் பெற்றவர்கள் ஆவோம் என காந்திஜி அறைகூவினார்.

பல்கலைக் கழகங்கள் இந்தியர்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்க வேண்டும் என்றும் அதுதான் சரியான இந்தியக் கல்வியாக இருக்க முடியும் என்றும் காந்தி உறுதியாகக் கருத்துக் கொண்டிருந்தார். நமது தாய்மொழி என்பது நம் பிரதிபலிப்பு. 

ஆங்கிலம் என்ற வெளிதேச மொழி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படியிருக்க ஏன் இந்த வெளிநாட்டு மொழியின்மீது நம் இந்தியர்களுக்கு இத்தனை மோகம்? என்று கேட்ட காந்தி மேலும் கேட்கிறார்:

`நான் பூனாவில் சில பேராசிரியர்களிடம் அக்கறையோடு விசாரித்தேன். அறிவை ஆங்கிலத்தின் வழியேதான் அடைய முடியும் என்ற நிலைமை இந்தியாவில் உள்ளதால் ஏறக்குறைய ஆறு பொன்னான வருடங்களை இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வீணாக்குகின்றனர் என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள்.

அந்த உண்மையை அறிந்து என் மனம் திடுக்கிட்டது. எத்தனை மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்கிறார்கள் என்று கணக்கிட்டு ஆறு ஆண்டுகளை அந்த எண்ணிக்கையால் பெருக்கிப் பாருங்கள். நம் இந்தியாவுக்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இழப்பேற்பட்டிருக்கிறது என்பது புரியும்.

அறிவை அவரவர் தாய்மொழியிலேயே அடைய முடிந்தால் இந்த ஆங்கில மொழி என்ற அன்னியச் சுமை நம் இந்தியர்களுக்கு எதற்காக? அறிவு என்பது வேறு, ஆங்கில அறிவு என்பது வேறு. அறிவை ஆங்கிலத்தில்தான் அடைய வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது? ஏன் இந்த அளவற்ற ஆங்கில மோகம்?

தாய்மொழியில் அறிவைப் பெறவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நாம் எந்த முயற்சியும் பெரிதாக எடுக்கவில்லை.

நம் வாழ்வின் முக்கியமான இளமைப்பருவ ஆண்டுகளை ஒரு மொழிக்கு நம் நாவைப் பழக்குவதற்கே நாம் செலவிட்டால், நம் அறிவின் இழப்பு என்பது எத்தகையதாக இருக்கும்? ஆங்கிலத்தில் கல்வி கற்றவர்கள் தான் இந்தியாவின் மேன்மைக்காக எல்லாத் துறைகளிலும் உழைத்து வருகிறார்கள் என்பது வெட்கக் கேடானது என்கிறார் காந்தி.

நாம் பெறும் அறிவு என்பதே ஆங்கில மொழியறிவு தான். வேறு துறைசார்ந்த அறிவு அல்ல. முதலில் ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெற்று நாம் துறைசார்ந்த அறிவுக்குப் போவதற்குள் பலப்பல ஆண்டுகள் நம் வாழ்வில் வீணாகிவிடுகின்றன.

ஒருவேளை நாம் கடந்த ஐம்பது ஆண்டுகள் நம் தாய்மொழியிலேயே கல்வி கற்றிருந்தால், வெறும் ஆங்கிலத்தைப் பயில்வதற்காக வீணாக்கிய நாட்களெல்லாம் பயனுள்ளவை ஆகியிருக்கும்

. நாம் இன்றிருக்கும் நிலையே வேறானதாய் இருக்கும். நம் பாரதம் எல்லாத் துறைகளிலும் இன்னும் கணிசமான அளவு முன்னேறியிருக்கும்.

சுதந்திர இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் இங்கே ஆங்கில மொழிபேசும் அன்னியர்களாக வாழக் கூடாது. அவரவர் தாய்மொழியை கம்பீரமாகப் பேசும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் உணரவேண்டும்.

தாய்மொழியில் கல்வி கற்பதும் தாய்மொழியில் நம் நிர்வாகத்தை நடத்துவதும் மட்டுமே நமது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும்.

தாய்மொழியிலேயே தொழிற் கல்வியைக் கற்பிப்பது இப்போது கடினமாகத் தோன்றலாம். இன்றைய நிலை அப்படி இருக்கலாம். இதற்காகச் சோர்வடையத் தேவையில்லை. போகப்போக அது மிகச் சுலபமானதாக மாறிவிடும்.

மாணவர்கள் மொழியறிவு பெறத் திணற மாட்டார்கள். ஏற்கெனவே அவர்களுக்கு மிக நன்றாகக் கைவந்துள்ள தாய்மொழியிலேயே அறிவை அடையும்போது, அவர்கள் அந்த அறிவை மிக விரைவாக அடைந்து விடுவார்கள்.

இன்னொரு மொழியின் சுமையில் அறிவைத் தேடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்து அவர்கள் ஆனந்தமாக விடுதலை பெறுவார்கள்.

காந்தி காலத்திலேயே தாய்மொழியில் எல்லா அறிவுசார்ந்த விஷயங்களையும் மொழிபெயர்க்க இயலாது என்றும் சிலர் கருத்துக் கூறினார்கள். அவர்களைப் பார்த்துப் பரிவோடு நகைத்தார் காந்திஜி.

நம் ஒவ்வோர் இந்திய மொழியிலும் கிராமப்புற மனிதர்களிடம் எத்தனையோ நுணுக்கமான வட்டார வழக்குகள் இருக்கின்றன.

அவற்றிலிருந்தெல்லாம் நாம் சொற்களைக் கடன்பெறலாம். முயன்றால் எல்லா அறிவுத் துறைசார்ந்த விஷயங்களையும் அவரவர் தாய்மொழியில் இந்தியர் படிப்பது முற்றிலும் சாத்தியமே என்றார் மகாத்மா.

நல்ல அறிவார்ந்த சொற்களைப் பெறுவதற்கு சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஒவ்வொரு மொழியிலும் புழங்கப்படும் கிராமத்து வட்டார வழக்குகள் நம் தேவையைக் கட்டாயம் பூர்த்தி செய்துவிடும் என்று காந்திஜி கருதினார்.

நேரு பிரதமராய் இருந்த காலத்தில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என்ற கருத்தோட்டம் உருப்பெற்றது. அன்னியமொழியான ஆங்கிலத்தை நிராகரித்து இந்தியை தேசமெங்கும் ஆட்சிமொழியாகக் கொண்டுவரும் திட்டம் தோன்றியது.

நேரு காலமானபின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான காலகட்டம். அப்போதுதான் தமிழகமெங்கும் இந்தித் திணிப்பிற்கான எதிர்ப்பலை மிகப் பெரிய அளிவில் கிளம்பியது. இந்தியைத் தாங்கள் கற்க வேண்டும் என வற்புறுத்தப் படுவதைப் பல மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிலர் தீக்குளிக்கவும் செய்தார்கள். உயிரிழப்புகள் நேர்ந்தன. அப்போது அந்தத் தமிழகப் பிரச்னை தில்லி வரையில் வெடித்தது. அதைச் சீர்செய்ய வேண்டியது சாஸ்திரியின் கடமையாயிற்று.

மற்ற மாநிலத்தவர் விரும்பும் வரை ஆங்கிலமும் புழக்கத்தில் இருக்கும் என்று ஏற்கெனவே நேரு சொல்லியிருந்தார். லால்பகதூர் மும்மொழித் திட்டத்தை அமல் படுத்தினார். 

பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவை கற்பிக்கப்படுவதோடு, அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தி திணிக்கப்படாது என்ற உத்தரவாதம் கிடைத்ததும் தமிழகம் சற்று அமைதி கண்டது.

அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற காந்தியக் கண்ணோட்டம் சிக்கலற்றதாகவும் எல்லோராலும் ஏற்கப்படுவதாகவும் இருந்தது. ஆனால் எந்த அளவு அது இன்று நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது என்பது கேள்விக்குறியே.

எல்லா மாநிலங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் வரை அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படும் என்ற நிலை தோன்றினால்தான் காந்தி கண்ட கனவு நிறைவேறியது என்று கொள்ள முடியும். அந்தக் கனவு எவ்வளவு விஞ்ஞான பூர்வமானது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

காந்திஜி அளவற்ற தாய்மொழிப் பற்றால் இந்தக் கருத்தைக் கூறவில்லை. இயல்பிலேயே வீட்டிலும் வெளியிலும் புழங்குகிற தாய்மொழியில் கல்வி கற்றால், ஆங்கிலம் என்ற அன்னியச் சுமையை மூளையில் ஏற்றிக் கொள்வதற்காகச் செலவாகும் பலப்பல ஆண்டுகளை மிச்சம் பிடிக்க முடியும்.

இதுவே காந்தியின் தாய்மொழிக் கல்வியின் பின்னுள்ள சூட்சுமம். இந்தக் கண்ணோட்டத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

இந்தியாவின் எதிர்காலம் நூறுசதவிகிதம் தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாக அமையும் என்றும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அந்தந்தத் தாய்மொழிகளில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, தொழிற் கல்வி போன்றவற்றைக் கற்பிக்கும் நாள் விரைவில் வரும் என்றும் நம்புவோம்.

அப்படியொரு காலம் வந்துவிட்டால் இந்திய இளைஞர்கள் இன்னும் வேகமாக அறிவுசார்ந்த துறைகளில் முன்னேறத் தொடங்கிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா இன்னும் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe