அரசுத் திட்டங்கள் கிராமப் பெண்களை சேர வேண்டும்
~ ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட் ~
“நம் நாடு கிராமங்களில் தான் வாழ்கிறது,” என்று அன்றே கூறிய காந்தியடிகளின் வாக்கு இன்றும் நிதர்சனமாய் உள்ளது. அந்தக் கிராமங்களில் வாழ்வியலை உயர்த்த பெண்களின் கணிசமான பங்கும் உள்ளது.
அக்டோபர் 15-ஆம் தேதி கிராமப்புற பெண்கள் தினம்.
ஆதவனின் கதிர்கள் தங்கள் இல்லங்களின் முற்றத்தில் விழும் நேரத்திற்கு முன்பாகவே பெரும்பாலான கிராமப் பெண்களின் கால்கள் தங்கள் பணியிடமான வயல்களை நோக்கி நடக்க தொடங்கி விடும்.
கனுக்காலிற்கு மேல் கட்டப்பட்ட சேலை, தலையில் சாப்பாடு, சில பெண்களின் இடுப்பில் குட்டி குழந்தைகள் என அவர்கள் பரபரப்பாய் நடக்கும் காட்சிகளைக் காணும் கவிஞர்களுக்கு நல்ல கவிதைகளும், புகைப்படக் கலைஞர்களுக்கோ அருமையான புகைப்படங்களும் கிடைக்கும். ஆனால், இப்பெண்களுக்கோ வாழ்வாதாரத்திற்காக ஓடும் ஓட்டத்திலும் கூட கிராமிய பொருளாதரத்தில் ஒர் குறிப்பட்ட சதவீதம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
இன்று, பன்பாட்டு நிறுவனங்களில் வேலையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளை பணி இடத்திலேயே வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்தக் கருத்தை நம் கிராமப்புற பெண்களோ பல வருடங்களுக்கு முன்பே வயலில் இருக்கும் மரங்களில் தூளியைக் கட்டி தங்கள் குழந்தைகளை தூங்க வைப்பார்கள். கைகள் வயல் வேலையில் இருந்தாலும் மனமும், கண்களும் குழந்தைகளின் தூளியையும் கவனிக்க தவறாது.
பல சமயங்களில் ஊர் விட்டு ஊர் வந்து கூட வயலில் வேலைப்பார்ப்பவர்களும் உண்டு. ஒருமுறை, வயலில் இருந்த டிராக்டரில் குழந்தைக்காக தூளிக்கட்டி குழந்தைக்கு தாலாட்டுப் பாடிய பெண்ணை நான் கண்டதும் மனம் கலங்கியது. தோள் சுருங்கிய பின்னரும் மனதில் தைரியத்துடன் வயல் வேலையிலும், பிற வேலைகளிலும் ஈடுபட்டு தன் குடும்பத்திற்கு ஆதாரமாய் இருக்கும் பேரிளம்பெண்களும் பலர்.
மஹாராஷ்டிராவில் உள்ள காந்தி மாவட்டமான வர்தாவில் இருக்கும் சமூக சேவகரான மாலதி தேஷ்முக் கூறும் போது “தற்போது வயல் வேலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து தான் போயுள்ளது. இதில் கடுமையாய் உழைக்கவும் வேண்டியுள்ளது. நிரந்த வருமானத்திற்கும் தற்போதைய சூழலில் பெண்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். பெண்களுக்கான கூலியும் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்,” என்றார்.
“பல பெண்களுக்கு தங்கள் உடல் நலத்தைப் பற்றியும், தனிப்பட்ட சுகாதாரப் பற்றிய விழுப்புணர்வும் குறைவாகவே உள்ளது. அவர்களுக்கு இவற்றைப் பற்றி விளக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம்,” என்றார்.
தற்போது இப்பெண்கள் கல்வியின் அவசியத்தை அறிந்து தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான விஷயத்தையும் பகிர்ந்தார், மாலதி தேஷ்முக்.
அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய விஷயங்கள், இப்பெண்கள் வரை சேரவில்லை என்பதே கசப்பான உண்மை.
விவசாயம் சார்ந்த மற்றும் பல்வேறு பணிகளை செய்து எண்ணற்ற குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரமாய் இருக்கும் கிராமப்புற பெண்களுக்கு ஒரு சலாம் தரும் நேரமிது.
அவர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் சுகாதாரம் தருவதற்கு அரசுகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.