ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் –பகுதி-17
தெலுங்கில்: பி,எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கண்டக நியாய: – முள்ளை முள்ளால் எடுப்பது.
(கண்டக: – முள்)
சில தாவரங்களில் முளைக்கும் கூர்மையான கிளை பாகங்களே முட்கள். கண்டகம் என்றால் எரிச்சல், எதிரி என்ற பொருளும் உண்டு.
காலில் முள் குத்தும் அனுபவம் கிராமத்து ஜனங்களுக்கு அதிகம் ஏற்படும். முக்கியமாக விவசாய நிலங்களில் பணிபுரிபவர்கள் சில தலைமுறைகள் முன்பு வரை காலுக்கு செருப்பு கூட அணியாமல் நடப்பார்கள். அவர்கள் காலில் குத்தும் முள்ளை எடுப்பதற்காக. கழுத்து சங்கிலியிலோ, அரைநாண்கயிற்றிலோ ஒரு ஊக்கு செருகி வைத்திருப்பார்கள்.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும். இரும்பை இரும்பால்தான் அடித்து உடைப்பார்கள். இதுவே சுருக்கமாக ‘கண்டக’ நியாயத்தின் பொருள்.
பகைவன் எப்படிப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்துகிறானோ அவனை வெல்வதற்கு மேலும் வலுவான ஆயுதங்கள் தேவைபபடும். அதைவிட கூர்மையான கருவிகளை பயன்படுத்த வேண்டி வரும். பகை நாடுகளுக்குப் போட்டியாக நாட்டுப் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொள்வது அதற்காகத்தான்.
அண்மையில் கோவிட் 19க்கு பயன்படுத்திய வாக்சின் கூட கண்டக நியாயத்திற்கு அறிவியல் பூர்வமான உதாரணம். ஹோமியோ வைத்திய முறையின் முக்கிய அங்கமான ‘சமான ஔஷத’ சித்தாந்தத்தின் ஆதாரம் இந்த கண்டக நியாயமே.
“ந விஷப்ரதிமம் கிஞ்சித் நிர்விஷீகரணம் விஷே” –(அஷ்டாங்க ஹ்ருதயம்).
Nothing is equal to poison to neutralise the poison. பிளாஸ்மா சிகிச்சைகளுக்கு ஆதாரம் ‘கண்டக’ நியாயமே. முள்ளை முள்ளால் எடுப்பது என்பது ஒரு முறை, ஒரு நெறி, Strategy.
அறிஞர்கள் இந்த ‘முள்ளை முள்ளால் எடுக்கும்’ வியூகத்தை முக்கியமாக நான்கு விதமாக விவரிக்கிறார்கள்.
1.ஆப்த கண்டக வ்யூஹம் – முள்ளை எடுத்து விட்டு அவ்வாறு எடுக்கப் பயன்படுத்திய ஆயுதத்தை கூர்மையாக்கிக் கொள்வது.
2.வர்ஜநீய கண்டக வ்யூஹம் – முள்ளால் முள்ளை எடுத்தபின் குத்திய முள்ளையும் எடுக்க உதவிய முள்ளையும் கூட அழித்து விடுவது.
3.பலி கண்டக வ்யூஹம் – ஆபத்தான முள்ளை நீக்குவதற்கு வலிமையான ஆயுதம் உபயோகிப்பது. அந்த முயற்சியில் முள்ளை எடுத்தாலும் அந்த வலுவான ஆயூதம் உடைந்து போவது. முள் எத்தனை ஆபத்தானதோ அதனை எடுப்பதற்கு பயன்படுத்தும் ஆயுதம் கூட அதே அளவு கூர்மையானதாக இருக்க வேண்டும்.
4.அவஞ்ஜ கண்டக வ்யூஹம் – எதிரியான முள்ளை எடுத்தபின் பயன்படுத்திய முள்ளைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவது
இந்த நான்கு முறைகளுக்கும் உதாரணங்களைப் பார்ப்போம்:-
1.ஆப்த கண்டக வியூஹம்:- தர்மத்தின் வெற்றிக்கு குறுக்கே வரும் முட்களை நீக்கும் செயலில் இந்த வியூஹத்தை பயன்படுத்துவர். தர்ம யுத்தம் அதாவது தர்மத்தை நிலைநாட்டுவதற்காகச் செய்யும் போர். இதில் தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனே முக்கியம். அதுவே தர்ம சூட்சுமம்.
இது போன்ற வியூஹம் தொடர்பான சம்பவங்கள் மகாபாரதத்தில் பல இடங்களில் தென்படுகிறது. அவற்றுள் ஒன்று பீஷ்மருடைய இறுதிக் காலம். மானுட வடிவில் வந்த மாயக் கண்ணனின் அறிவுரைப்படி பாண்டவர்கள் ஒன்றாக பீஷ்மரை அணுகி இச்சா மரண வரம் பெற்ற அந்த வீரரை எவ்வாறு வதைப்பது என்று அறிந்து கொள்வது, சிகண்டி என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அந்த வலுவான முள்ளை விலக்குவது… ஆப்த கண்டக வியத்திற்கு புகழ் ஏற்ற எடுத்துக்காட்டு. இங்கு முள் விலகியது. ஆனால் எடுத்த ஆயுதமான சிகண்டி நலமாக இருந்தாள்.
2.வர்ஜநீய கண்டக வியூஹம்:- முள்ளை முள்ளால் எடுத்தபின் இரண்டுமே தேவையில்லாதவை… ஆபத்தானவை… மீண்டும் வேறு யாரையாவது குத்தலாம் என்று நினைத்து இரண்டையும் அழித்து விடும் இந்த வியூஹத்தை ஆச்சாரிய சாணக்கியர் பயன்படுத்தினார்.
செல்யூகசை தோற்கடிப்பதற்காக பர்வதராஜாவின் உதவியை வேண்டினார் கௌடில்யர். அதற்கு பிரதிபலனாக தனனையே ராஜாவாக ஆக்குவார் என்று ஆசைப்பட்டான் பர்வதராஜா. ஆனால் வேலை முடிந்ததும் செல்யூகஸ் என்ற முள்ளை விலக்கியபின், வரப்போகும் ஆபத்தைத் தடுப்பதற்கு விஷக்கன்னியை பிரயோகித்து பர்வத ராஜாவை அழித்தார் ஆச்சார்ய சாணக்கியர். இது வர்ஜநீய கண்டக வியூஹத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
3.பலி கண்டக வியூஹம்:- சின்ன பாம்பாக இருந்தாலும் பெரிய கம்பால் அடிக்க வேண்டும் என்னும்போது, பெரிய பாம்பாக இருந்தால்…? அப்படிப்பட்ட சமயங்களில் உபயோகப்படுத்துவதே பலி கண்டக வியூஹம். இந்த மூன்றாவது வியூஹத்தை பயன்படுத்தியவர் சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணரே. மகாபாரத காலத்தில் குருட்சேத்திர போரில் துரோண பர்வத்தில் ஒரு இரவு. மிகவும் பயங்கரமான யுத்தம் நடந்தது. கர்ணனின் வீரபரக்கிரமத்தில் பாண்டவ சேனை சின்னாபின்னமானது. கர்ணனை வதைப்பது என்பது யாருக்கும் சாத்தியம் இல்லாத சந்தர்பத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கண்டக நியாயத்தின் இந்த மூன்றாவது நெறியை பயன்படுத்தினர். கர்ணனிடம் இருந்த சக்தி ஆயுதம் அர்ஜுனனை வதைப்பதற்கான வைத்திருந்தான். அதுதான் சக்தி பொருந்திய முள். கர்ணனுக்கு இந்த பாணத்தை பிரயோகிக்க வேண்டும் என்பது யுத்த பூமியில் இருக்கும்போது நினைவுக்கு வரவில்லை. அதுவும் கிருஷ்ண மாயையே. சக்தி ஆயுதத்தை வேறு யார் மீதோ பிரயோகிப்பதற்கு வியூஹம் அமைத்தான் மாயக் கண்ணன்.
ஸ்ரீவாசுதேவனின் அறிவுரைப்படி பீமன் கடோத்கஜனை ஆவாஹனம் செய்தான். பிரத்தியக்ஷமான கடோத்கஜனிடம், “நீ உன் தந்தை மற்றும் மாமாவின் அஸ்த்ர பலத்திற்குச் சமமான வீர காரியம் செய்ய வேண்டும்” என்று நடக்கப் போவதை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தினான் ஸ்ரீகிருஷ்ணன். “கர்ணனை எதிர்கொள்ளும் வாய்ப்பு உனக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்று எடுத்துரைத்தான்.
அதன் பின் கடோத்கஜனின் வீர பராக்கிரமத்தால் உக்கிரமான போர் நடந்தது. கௌரவ சேனையில் அலம்புஷன், அலாயுதன் என்ற பராக்கிரம ராக்ஷசர்களை வதைத்தான். கடோத்கஜன் செய்த அழிவுகளால் கௌரவ சேனை சிதறி ஓடியது. சக்தி ஆயுதத்தால் கடோத்கஜனை வதைக்கா விட்டால் அதுவே அனைவருக்கும் இறுதி இரவாகிவிடும் என்று எண்ணிய துரியோதனன் கர்ணனை சம்மதிக்கச் செய்தான். வேறுவழியில்லாத நிலையில் அர்ஜுன சம்ஹாரத்திற்காக மறைத்து வைத்திருந்த சக்தி பாணப் பிரயோகதால் கௌரவர்களுக்கு கடோத்காஜன் என்ற முள் நீங்கி இருக்கலாம். ஆனால் கண்ணனுக்கு இருந்த சக்தி பாணப் பிரயோக பயம் என்ற முக்கியமான முள் நீங்கியது. அதனால்தான் பாண்டவர்கள் அனைவரும் கடோத்கஜனின் மரணத்தால் சோகத்தில் இருந்தபோது ஸ்ரீகிருஷ்ணன் ஜெய ஜெய வாழ்த்துக்களோடு அர்ஜுனனை ஆலிங்கனம் செய்துகொண்டு பாராட்டி அவனுடைய தோளை ஆதரவாகத் தட்டினார்.
தர்ம பரிபாலனத்திற்கு அர்ஜுனனின் தேவையை கருத்தில் கொண்டு தடையாக இருந்த சக்தி என்ற முள்ளை மிகவும் மதிப்பு வாய்ந்த ஆயுதத்தால் எடுத்து எறிந்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆயுதம் முறிந்து போனது. (சிம்ஹகாட் வெற்றியின் பின் சிவாஜி கூறியது போல், ‘கட் மிலா லேகின் ஸிம்ஹ் கயா’) சக்தியின் தொல்லை தீர்ந்தது. ஆனால் கடோத்கஜன் மரணமடைந்தான். மாவீரன் பலி ஆனான்.
4.அவஞ்ஜ கண்டக வியூஹம்:- சிவாஜி ஸ்வராஜ்ய ஸ்தாபனத்தின் போது நடந்த சம்பவம் இந்த அவஞ்ஜ கண்டக வியூஹத்திற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. சத்ரபதி ஆவதற்கு முன் சிவாஜி தன் சக்தி சாமர்த்தியங்களால் சுமார் முப்பது கோட்டைகளை வென்றான். பீஜாபூர் சுல்தானுக்கு அது கண்ணை உறுத்தியது. கோபம் வந்தது. எப்படியாவது கோட்டைகளை கைப்பற்ற வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினான். தன்னிதம பணி புரியும் சிவாஜியின் தந்தை சஹாஜீயை கைது செய்து, “உன் தந்தை என்னிடம் கைதியாக உள்ளார். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீ வென்ற கோட்டைகள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உன் தந்தையைக் கொன்று விடுவேன்” என்று சிவாஜிக்கு செய்தி அனுப்பினான்.
சிவாஜி ஆபத்தான சூழலில் சிக்கினான். ஒரு புறம் பெற்ற தந்தை. மறுபுறம் தன்மானம். தோல்வியை அறியாத சிவாஜி யோசனையில் ஆழ்ந்தான். தன் கணவன் கவலையில் இருப்பதை அறிந்த சிவாஜியின் மனைவி, “சுவராஜ்யமா தந்தையா என்பது அல்ல பிரச்சினை. இந்த இரண்டில் ஒன்றல்ல. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கணவனை உற்சாகப்படுத்தினாள். ‘அவஞ்ஜ கண்டக வியூஹம்’ – சிவாஜியின் மதியில் மின்னியது. முள்ளை மற்றொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
ஔரங்கசீபுக்கு கடிதம் எழுதினான். “உங்கள் சேவகனாக, உங்களுக்காகவே இந்த கோட்டைகளை சம்பாதித்தேன். பீஜாபூர் சுல்தான் என் தந்தையை கைது செய்து கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான். நீங்கள் தலையிட்டு அவனை அடக்கவேண்டுமென்று வேண்டுகிறேன்” என்று எழுதினான். உடனே ஔரங்கசீபு பீஜாப்பூர் சுல்தானுக்கு செய்தி அனுப்பினான். “சிவாஜி என் ஆள். அவனுடைய தந்தையை விடுவித்து விடு. இனிமேல் சிவாஜியை தொல்லை செய்தால் என் படை உன்னை சும்மா விடாது” என்று. உடனே சுல்தான் அஞ்சி அவுரங்கசீப் கூறியபடி செய்தான் ஷஹாஜீயை விடுதல செய்தான். சுல்தான் என்ற முள்ளை நீக்கியபின் ஔரங்கசீப் என்ற முள்ளை கண்டுகொள்ளாமல் அலைக்கழித்தான் சிவாஜி மகாராஜ். இவ்விதமாக கண்டக நியாயம் ஒரு பரிகாரம். ஒரு வியூகம். ஒரு தீர்வு. புத்திசாலித்தனமான திட்டம்.
நிகழ்கால அரசியலில் கூட கண்டக நியாயத்தை அனுசரித்து வெற்றியை சாதித்த சம்பவங்கள் நிறைய உள்ளன.