![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2024/03/caa-citizenship-amendment-act.jpg?resize=696%2C392&ssl=1)
அண்டை இஸ்லாமிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவதிப்படும் அந்நாடுகளின் சிறுபான்மை சமூகத்தினருக்கு நம் நாட்டில் குடியுரிமை அளித்து பாதுகப்பளிப்பதற்கான சட்டம் தான் சிஏஏ என்பதை தெளிவுபடுத்தி உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் இதனை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
“மோடி அரசு குடியுரிமை (திருத்த) விதிகள், 2024ஐ அறிவித்தது. இந்த விதிகள் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும்.
இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றொரு உறுதிப்பாட்டை ஈடேற்றி, அந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்“ ”
– உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா
CAAவால் ஏற்படும் குடிபெயர்வு: இந்திய சமூகத்தின் இறையாண்மையும் மனிதாபிமானமும்
குடிபெயர்வு காரணமாக சமூக, பொருளாதார மற்றும் சட்ட சவால்களை நமது இந்திய சமூகம் எதிர்நோக்குகிறது. நமது இறையாண்மை, தேசிய அடையாளம் மற்றும் மனிதாபிமானம் காரணமாக இந்திய மக்கள் இடையே இடம்பெயர்வு மற்றும் குடியுரிமை குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து ஒடுக்குமுறை காரணமாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து வரும் இந்து, சீக்கியர், பௌத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக முன்மொழியப்பட்ட சட்டம்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற CAA.
மேற்கூறிய நாடுகளில் இருந்து, ஒடுக்குமுறை காரணமாக துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படும் சிறுபான்மையினர் அடைக்கலமும் பாதுகாப்பும் மட்டுமின்றி விரைவாக குடியுரிமை பெறுவதற்கும் இது வழிவகை செய்கிறது.
CAA இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கிறது. யார் இந்தியக் குடிமகனாக வேண்டும் என்று முடிவெடுப்பதில் இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. எனினும், மேற்கூறிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் பல அவலங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர் என்பதும் இந்தியா அவர்களுக்கான ஒரு பாதுகாப்பான புகலிடம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
புலம் பெயர்ந்தோர்க்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு சட்ட அல்லது ஜனநாயக பாரபட்சங்களற்ற சூழலை ஏற்படுத்த முயல்கிறது. மேலும், இந்தச் சட்டம் இந்தியக் குடிமக்களின் சட்ட, ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற உரிமைகளைப் பாதிக்காது.
இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் எந்த விதிகளையும் CAA மாற்றி அமைக்கவில்லை. எந்தவொரு நாடு மற்றும் மதத்தைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இன்னமும் சட்டப்பூர்வமாக இந்தியாவிற்கு பயணம் செய்யலாம், குடிபெயரலாம் மற்றும் இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் குடிமக்களாகவும் மாறலாம்.
இந்தச் சட்டம் வருங்காலத்தில் புலம்பெயரக்கூடியவர்களை சட்டப்பூர்வமாக வகைப்படுத்துகிறது. தங்கள் சொந்த நாடுகளில் தேசியமதம் அல்லாத மதங்களை கடைபிடிப்பதால் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகங்கள் மட்டுமே CAA மூலம் குடியுரிமை பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய வகைப்படுத்தல், இந்த சட்டத்தின் நோக்கம் தன்னிச்சையானது அல்ல; சட்டத்தின் முன் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பின் 14வது பிரிவுக்கு இணங்க செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
அண்டை நாடுகளில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் இச்சட்டத்தை மேலும் நியாயப்படுத்துகின்றன. நமது எல்லைகளுக்கு அப்பால், அண்டை நாடுகளின் தேசிய கட்டமைப்புகள், மக்கள்தொகை அமைப்புகள் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் இந்தியா இந்த துன்புறுத்தப்பட்ட சமூகங்களுக்கு மிகவும் சாத்தியமான புகலிடமாக இருக்கிறது.
CAA மூலம் நாம் சட்டப்பூர்வமாக மனிதாபிமான அடிப்படையில் செயல்பட முடியும். இருப்பினும், இது மதங்களுக்கு இடையிலான மோதல்கள், அரசியல் இயக்கங்கள் அல்லது இனப் பாகுபாடு தொடர்பான ஒடுக்குமுறையாக என்றும் வடிவெடுக்காது. மியான்மர் ரோஹிங்கியா விவகாரம் போன்றவை வெவ்வேறு அளவீடுகளைக் கொண்டுள்ளதால் பிற விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
பல நாடுகளின் பெரும்பான்மைச் சமூக மக்கள் சரியான விசாக்களுடன் இந்தியாவில் வசிக்கின்றனர். அவர்கள் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச கடமைகள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதற்கு இந்தியாவின் CAA ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த சட்டம் ஒடுக்கப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புகலிடத்தையும் புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பையும் வழங்குகிறது, மதச்சார்பின்மை மற்றும் மனிதாபிமான கொள்கைகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தச் சட்டம் மட்டுமே இதற்கான தீர்வு அல்ல. குடிபெயர்வு மற்றும் குடியுரிமைக்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் பரந்த கட்டமைப்பிற்குள் இது ஒரு அங்கம் மட்டுமே. இச்சட்டத்தின் நன்மைகளையும் சவால்களையும் வெற்றிகரமாக , புதிய குடிமக்களின் உரிமைகள் காக்கப்படும் என்று நம்பிக்கை தரும் வகையில், அவர்களை வெற்றிகரமாக இந்திய சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் கொள்கை-வழி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
CAA இந்திய குடியேற்றக் கொள்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையை பிரதிபலிக்கிறது. மத நம்பிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு இதுவே சான்று.
CAA உடனான இந்தியாவின் பயணம் வெற்றிபெற, நமது பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற சமூகத்தில் நிர்வாகத் திறமை, நுட்பமான சட்டமியற்றல் மற்றும் உண்மையான மனிதாபிமானம் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
CAAவின் விசாலமான, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், குடிபெயர்வு மற்றும் குடியுரிமை போன்ற சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்தியா மற்ற சர்வதேச நாடுகளை வழிநடத்த முடியும்.