திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

Published:

pm modi in thiruparankundram temple - 2026

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த ‘முதல் பிரதமர்’ என்ற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி. அவர், அங்கே 15 நிமிடங்களுக்கும் மேல், பக்திப் பரவசத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டதுடன், சந்நிதி முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். 

அண்மைக் காலமாக, திருப்பரங்குன்றம் தேசிய அளவில் கவனம் பெற்றது. அதற்குக் காரணம்,  தீபம் ஏற்றுதல் தொடர்பாகவும், நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்திலும் விவகாரத்தை முன்வைத்த திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள். அந்நேரம், தில்லியில் உள்ள பாஜக., தலைவர்களும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போதே பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று மதுரையில் தேஜ., கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தார். முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டார். அப்போது அவர், காவி சால்வை, வெள்ளை வேட்டி அணிந்து ஆலயத்துக்கு வந்திருந்தார். அவருக்கு மேளதாளம் பூர்ண கும்பத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் ராஜா, சந்திரசேகரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்பு அவர், கருவறைக்குச் சென்று குமரனை மனமுருகி வழிபட்டார். தரிசனம் செய்து திரும்பும்போது கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

இந்த பயணத்தின் போது, முக்கியமாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. மதுரை மண்டேலா நகரில் கூட்டம் தொடங்கும் முன், பூர்ணசந்திரனின் தாய் காளீஸ்வரி, மனைவி இந்துமதி, மகன்கள் சிவனேஷ், இனியன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்  பொதுக்கூட்ட மேடையில் பேசும் போதும், அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதை, மேடையில் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img