
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
27.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி (19.3 ஓவர்களில் 161/6) நியூசிலாந்து அணியை (20 ஓவர்களில் 159/7) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 28.02.2026 அன்று பல்லேகலேயில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 212/8) இலங்கை அணியை (20 ஓவர்களில் 207/6) 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருந்தபோதிலும் குறைந்த ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. குரூப் 2வில் இருந்து இங்கிலாந்து (முதலிடம்), நியூசிலாந்து (இரண்டாமிடம்) ஆகிய இரண்டு அணிகளும் தேர்வாயின. இலங்கை அணி தேர்வாகாததால் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும்.
நேற்று (01.03.2026) டெல்லியில் நடைபெற்ற ஜிம்பாபே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தெனாப்பிரிக்க அணி (17.5 ஓவர்களில் 154/5) ஜிம்பாபே அணியை (20 ஓவர்களில் 153/7) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்று, குரூப் 1 பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துகொண்டது.
நேற்று கொல்கொத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த மற்றொரு சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. பூவாதலையா வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் (33 பந்துகளில் 32 ரன்) மாற்றும் ரோஸ்டன் சேஸ் (25 பந்துகளில் 40 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த வீரர்களான ஷிம்ரொன் ஹெட்மயர் (12 பந்துகளில் 27 ரன்), ரூதர்போர்ட் (9 பந்துகளில் 14 ரன்), ரொவ்மென் போவெல் (19 பந்துகளில் 34 ரன்) ஜேசன் ஹோல்டர் (22 பந்துகளில் 37 ரன்) எடுத்தனர். 12ஆவது ஓவரை வீசிய பும்ரா ஹெட்மயர், சேஸ் ஆகிய இருவரின் விக்கட்டுகளை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மே.இ. தீவுகள் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாட வந்த இந்திய அணியின் வீரர்கள் நிலைத்து ஆடவில்லை, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 10 ரன்), இஷான் கிஷன் (6 பந்துகளில் 10 ரன்), சூர்யகுமார் யாதவ் (16 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்கவேண்டும் என்ற துடிப்பில் விக்கட்டுகளை இழந்து வெளியேறினர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்கு திலக் வர்மா (15 பந்துகளில் 27 ரன்), ஹார்திக் பாண்ட்யா (14 பந்துகளில் 17 ரன்), ஷிவம் துபே (4 பந்துகளில் 8 ரன்) ஆகியோர் நல்ல கம்பனி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 199 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
சஞ்சு சாம்சனின் இன்றைய ஆட்டம் இந்திய வீரர்கள் எப்படி ஆடவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 18ஆவது ஓவரில் ஷிவம்துபே அடித்த இரண்டு ஃபோர்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய போது பும்ரா எடுத்த இரண்டு விக்கட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆயினும் ஒரு அணியாக இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. அர்ஷதீப்பின் ஒரு ஓவரில் 24 ரன் கொடுத்தது இந்திய அணிக்கு கடினமான இலக்கைத் தந்தது. பிடிக்காமல் விட்ட கேட்சுகள் இந்திய அணிக்குப் பாதகமாக அமைந்தன.
சூப்பர் 8இல் குரூப் 1இல் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தையும் இந்திய அணி இரண்டாமிடத்தையும் பெற்றன. அரையிறுதி ஆட்டங்கள் 4 மற்றும் ஐந்து தேதிகளில் நடைபெற உள்ளன.
முதல் அரையிறுதிப் போட்டி கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 4ஆம் தேதி இரவு 0700 மணிக்கு நடைபெறும்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் 5ஆம் தேதி இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும்.




