தராசு முனையில் ‘தர்மம்’!

dharma dhyana meditation - 2026

— இந்தோல் சென்குப்தா —
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் புதுடில்லியில் நிகழ்த்திய மூன்று நாள் தொடர் உரை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தனர். ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டை ஒட்டி அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் கருத்தியல் தாயமைப்பாக கருதப்படுகிறது ஆர் எஸ் எஸ். அதன் வரலாற்றைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன . அதன் அர்ப்பணிப்பு , வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றும் முழுநேர ஊழியர்கள், இந்திய அரசை நடத்தும் பிரதமர் நரேந்திர மோதி உட்பட மத்திய அமைச்சரவையில் உள்ள பலரும் அந்த அமைப்பின் தொண்டர்கள் என்பன போன்ற உண்மைகள் பலரும் அறிந்ததே.

விரிவான விவாதம் தேவை

ஆன்மாவும் வாளும் (Soul and Sword) என்ற பெயரில் ஹிந்துயிசத்தின் அரசியலைப் பற்றிய நூலை நான் எழுதி உள்ளேன். அது தொடர்பான ஆய்வின் போது ஆர்எஸ்எஸ் ஸின் வரலாற்றைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால், அதன் மைய கருத்தியல் பற்றியும் அந்த கருத்தியலில் இயல்பு பற்றியும் நீண்ட விரிவான விவாதம் நிகழாமல் இருக்கிறது. பலரும் ஹிந்துத்துவ கருத்துகளின்படி இந்தியாவை ஹிந்துராஷ்டிரமாக்குவது அதன் நோக்கம் என்று ஒற்றை வரியில் சுலபமாக சொல்லி சென்று விடுகிறார்கள். பண்பாட்டு ரீதியில் ஹிந்துவாக வாழும் அனுபவத்தை, வாழ்வியலை, வெறும் அரசியல் மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் சுருக்கி சொல்லி செல்கிறார்கள்.

இந்த எளிய புரிதல்தான் ஆர்எஸ்எஸ் பற்றி பலருக்கும் உள்ளது. அந்த அமைப்புக்கு 50 – 60 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 70 ஆயிரம் கிளைகள் உள்ளன . அதன் மூலம் இந்திய சமுதாயத்தை தன் லட்சியத்திற்கு ஏற்ப மாற்ற நம்பிக்கையுடன் பணிபுரிந்து வருகிறது. அந்த மாற்றத்துக்கு ஒரு முக்கிய விசையாக அதன் அரசியல் கரமான பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை உறுதிப்படுத்த முனைகிறது. ஆனால் 1947 க்கு பிறகு சுதந்திர இந்திய வரலாற்றில் பல தசாப்தங்கள் அந்த கட்சி ஆட்சியில் இருந்ததில்லை. பாஜக ஆட்சியில் இருந்தது சொற்ப காலமே.

ஆர் எஸ் எஸ் எதன் மீது கவனமாக இருக்கிறது ? என்ற கேள்வி சரியானதாக இருக்கும். அதிகாரத்தின் மீது (அரசியல் அதிகாரம் மட்டுமல்ல சமுதாயத்தின் மீது செல்வாக்கு/ தாக்கம் என்ற அதிகாரமும் கூட) என்பது வழக்கமான பதில். பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பை கூர்ந்து கவனித்து வருபவன் என்ற அடிப்படையில், மேற்சொன்ன பதில் தவறு என்பதே எனது கருத்து.

rss 100 years - 2026
#image_title

சமநிலை

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆர் எஸ் எஸ் சமநிலையை பற்றி தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறது. 1925 இல் துவங்கியதில் இருந்து, இந்திய தத்துவங்களை கற்றதிலிருந்து, ஆர்எஸ்எஸ் தலைமை இந்திய தேசியத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் சமநிலை உணர்வு அவசியம் என்ற முடிவுக்கு மீண்டும் மீண்டும் வந்துள்ளது.

பொதுவாக நம்பப் படுவதற்கு நேர்மாறாக, ஆர் எஸ் எஸ் அதிகாரம் (சக்தி) என்பதை விடவும் சமநிலை (சமன்வய) என்ற மதிப்பீட்டை முக்கியமாகவும் நோக்கமாகவும் கொண்டுள்ளது என்பதை இப்போதுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை முன்னிறுத்துகிறது. இதுவே இந்த கட்டுரை முன் வைக்கும் மையக் கருத்து.

இந்த குறிக்கோள் நவீன சொல்லாடலால் வந்தது அல்ல. இந்தியாவின் சாரமான தத்துவ நாகரிகத்தில் ஊடுபாவாக உள்ள விஷயம் இது. சமநிலை, நல்லிணக்கம், எந்த பக்கசார்பும் இல்லாத மையப் பாதையை தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் வரலாற்று ரீதியாக இந்தியா வளர்த்தெடுத்த மதிப்பீடுகள். இவற்றிற்கேற்ப ஆர்எஸ்எஸ் அரசியல் சக்தியாக மட்டுமே தன்னை நிறுவுவதற்கு முனையவில்லை. மாறாக தொன்மையான தேசிய பண்புகளின் பாதுகாவலனாக தன்னை நிறுவ முனைகிறது.

சமநிலையே தர்மம்

முன்பிருந்ததை விட மேலும் உயர்வான இந்த புரிதலுக்கு காரணம் மோகன் பாகவத் தர்மம் பற்றி கூறிய தெளிவான வரையறை. புதுடில்லி நூற்றாண்டு உரையில் அவர் , ‘ தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் சமநிலையை பேணுவதே தர்மம். எதுவாக இருந்தாலும் தீவிரமாக அதன் இறுதி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். பாரதிய மரபு இதை நடுவழி என்கிறது. இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுகின்ற விஷயம் இது.’

தர்மம் என்றால் மதம் என்ற பொதுவான புரிதலில் இருந்து வேறுபட்டது இந்த விளக்கம். இங்கு தர்மம் என்பது சூழலியலுக்கு ,சமூகவியலுக்கு ஏற்ற கருத்தாக – தீவிரவாதத்தை விலக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும் சமநிலை கருத்தாக – விளக்கப்படுகிறது. ஒருவர் தன்னளவிலும் சமூக ரீதியிலும் இயற்கையோடு கூடிய உலகத்துடனும் ஒத்திசைவான சமநிலை கொள்ளும் வழிமுறையாக முன்வைக்கப்படுகிறது. இந்த விளக்கம் ஆர் எஸ் எஸ் ஸின் கருத்தியல் அரசியல் மற்றும் சமூக நோக்கம் கொண்டது என்பதிலிருந்து தத்துவார்த்தை நோக்கம் கொண்டது என்ற தளத்துக்கு நகர்த்துகிறது.

இங்கு அதிகாரம் என்பது இறுதி லட்சியம் அல்ல. மாறாக லட்சிய பாதையில் கிடைக்கும் கூடுதல் லாபம். அதே வேளையில் சமநிலையை பராமரிப்பதற்கு முரணாக செல்லுமானால் அது ஆபத்தானது. ‘மதத் தீவிரவாதம், அதனால் ஏற்படும் மோதல்கள், அமைதியின்மை’ ஆகியவற்றால் இன்றைய உலகம் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி பாகவத் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். நுகர்வு வெறி மற்றும் லௌகீக வாழ்வியல் கண்ணோட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.

கொள்கையற்ற அரசியல், மனிதநேயமற்ற அறிவியல் என்று மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய ஏழு சமூக தீமைகளை மேற்கோள் காட்டி நவீன சமுதாயங்களில் நிலவும் சமநிலை அற்ற சூழலுக்கான காரணங்களாக விளக்கினார்.

rss 100 years celeb - 2026
#image_title

நூற்றாண்டு செயல்திட்டம் ( பஞ்ச பரிவர்த்தன் )

இந்த தத்துவார்த்த லட்சியத்தை சமூக நடைமுறைப்படுத்த ஆர் எஸ் எஸ் தற்போது முனைப்பு காட்டி வரும் பஞ்ச பரிவர்த்தன், ஐந்து தளங்களிலான செயல் திட்டத்தை பற்றி அவர் எடுத்துரைத்தார். பஞ்ச பரிவர்த்தன் – சமூக நல்லிணக்கம் (சமாஜிக் சமரசதா) , நல்ல குடும்பம் பற்றிய விழிப்புணர்வு (குடும்ப பிரபோதன்) , இயற்கை சூழலியல் பற்றிய விழிப்புணர்வு (பரியாவரண் சங்கர்ஷன்) ,தன்னெறி (ஸ்வாஸ்த்தா ) – இது பண்பாட்டு பெருமை மற்றும் தற்சார்பை வலியுறுத்துவது, குடிமக்கள் கடமை (நாகரிக் கர்த்தவ்யா) என்பதே அந்த ஐந்து தளங்களிலான செயல் திட்டம்.

இவை ஒவ்வொன்றும் சமநிலையை மீண்டும் நிறுவுவதற்கான வழிமுறைகள். சமூக நல்லிணக்கம் என்பது வரலாற்று ரீதியான மோதல்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு ஜாதிகள், சமூகங்களிடையே உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய நல்லிணக்கத்தை நிறுவுவதற்கான செயல் திட்டம். குடும்பம் பற்றிய விழிப்புணர்வு , தனிமனிதரின் எதிர்பார்ப்புகளையும் குடும்ப பொறுப்புகளையும் சமநிலைப் படுத்தும் நோக்கம் கொண்டது. சூழலியல் பற்றிய விழிப்புணர்வு என்பது மனித முன்னேற்றத்திற்கும் இயற்கைக்குமான சமநிலைக்காக விடுக்கப்பட்ட நேரடி அறைக்கூவல்.

தன்னெறி மற்றும் தற்சார்பு (ஸ்வாஸ்தா மற்றும் சுதேசி) என்பது பொருளாதார சமநிலைக்கானது. ‘தற்சார்பு’ என்றால் ‘இறக்குமதியை நிறுத்துவது’ என்று பொருள் அல்ல. மாறாக சமமான நிலையில் இருப்பவர்களுக்கு இடையேயான தன்னிச்சையான சர்வதேச வர்த்தகம். இது தன்னை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் நம்முடைய அழுத்தத்திற்கு ஆள்படுபவர்களை நமக்கு சாதகமாக சுரண்டுவது அல்ல என்று பாகவத் தெளிவு படுத்தினார். இது தேச பொருளாதார நலன்களையும் சர்வதேச சார்பு என்பதையும் சமநிலைப் படுத்துவதற்கான அழைப்பு.

இறுதியாக, குடிமக்கள் கடமையானது தனி நபரின் உரிமைக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அவரது பொறுப்புகளையும் சமநிலைக்கு கொண்டு வருவது. நல்லிணக்கமும் செயல் துடிப்பும் கொண்ட சமுதாயத்திற்கான மிக முக்கியமான அம்சமிது.

இந்த ஐந்து தளத்திலான அணுகுமுறை உலகில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முழுமையான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி அந்த கண்ணோட்டத்தை, கருத்தியலை பற்றி வெறுமனே பேசாமல் அதை செயல்படுத்துவதற்கான பல பரிமாணங்களைக் கொண்ட துடிப்பான செயல்திட்டம் இது.

சமநிலை பற்றி ஹெட்கேவார்

ஆர் எஸ் எஸ் ஸை உருவாக்கிய கேசவ பலிராம் ஹெட்கேவாரின் பார்வையிலும் சமநிலை என்பது முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது வார்த்தைகளில் ,

” உலகத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவ வேண்டுமானால் அதற்கு சமநிலை தேவைப்படுகிறது. பலமுள்ளவனும் பலவீனமானவனும் ஓரிடத்தில் வந்தால் அங்கு அமைதி குலைகிறது. இரண்டு புலிகள் ஒன்றை ஒன்று துன்புறுத்துவதில்லை. அமைதியும் நல்லிணக்கமும் சம வலிமை கொண்டவர்களிடையேதான் நிலவும். “

ஹெட்கேவாரின் வார்த்தைகள் உலகம் முழுக்கவும் ஓங்கி ஒலிக்கும் வல்லமை படைத்தவை.

சமயங்கள் கூறும் சமநிலை

சமநிலையை பற்றிய கருத்து ஆர் எஸ் எஸ் இன் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, இந்திய தத்துவ நீரோட்டத்தின் ஆழத்திலிருந்து நேரடியாக பெறப்பட்டது. பாகவத் சொல்லிய ‘மையப்பாதை’ (மத்யமா பிரதிபாத்) என்பது பௌத்த சிந்தனையின் மையக் கருத்தாக இருக்கிறது. புலனின்பத்தில் மூழ்கி விடாமலும் தீவிர புலனொடுக்கத்தில் ஈடுபடாமலும் இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையில் மையப் பாதையில் வாழ்க்கையை நடத்தும்படி பௌத்தம் கூறுகிறது.

நான்கு புருஷார்த்தங்கள் – மனித வாழ்க்கையின் நோக்கம் பற்றிய சரியான வரையறை – என்று ஹிந்துக்கள் சொல்வதும் சமநிலைக்கான சிறந்த செயல்திட்டமாகும் . அது பொருளையும் (அர்த்த) இன்பத்தையும் (காம) தர்மம் என்ற வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் ஆன்ம விடுதலைக்கு (மோட்சம்) வழிகோலுகிறது. வாழ்க்கை என்பது உலகியலை மறுப்பதோ அல்லது உலகியல் சுகங்களில் மூழ்குவதோ கிடையாது. இந்த இரண்டிற்கும் இடையே சரியான வகையில் பயணிப்பதாகும்.

ஸ்ரீமத் பகவத் கீதை

ஹிந்து நூல்களில் உயர்வானதாக பகவத் கீதை கருதப்படுகிறது. காந்தி, விவேகானந்தர் , அரவிந்தர் போன்ற பலரும் அதை மிகவும் நேசித்துள்ளனர். கீதை நிஸ்காமிய கர்மா அல்லது தன்னலமற்று செயல் புரிவதை வலியுறுத்துகிறது. முழு அர்ப்பணிப்போடு செயல் புரிவது அதே வேளையில் பலனின் மீது பற்றற்று செயல் புரிவது என்ற உளவியல் சமநிலையை அது போதிக்கிறது.

லோக் சங்ரஹா ( உலக நலன் மற்றும் ஒற்றுமை ) என்று கீதை கூறுவது சமூக மற்றும் பிரபஞ்ச ஒழுங்கை பராமரிப்பதற்கான சிறந்த செயல்திட்டமாகும். உலகிலுள்ள எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒட்டுமொத்த சமநிலையை பராமரிக்க ஒவ்வொன்றிற்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. இந்த தொன்மையான ஞானம்தான் பாகவத் தன் உரையில் வெளிப்படுத்திய கண்ணோட்டத்தின் தத்துவ அடித்தளமாக இருந்தது.

மறைபொருளா ?

அந்தவகையில், பல நூற்றாண்டு காலமாக அன்னியர் ஆதிக்கத்தில் இருந்ததாலும் அதற்கு பிறகு ‘முழுமையற்ற’ மேற்கத்திய சித்தாந்தங்களான கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவத்தை பின்பற்றியதாலும் இந்தியர்களின் மரபான சமநிலையில் வாழ்வது என்ற புரிதல் மறைந்து போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அந்த வாழ்வியல் புரிதலை மீண்டும் நிறுவ களப்பணி செய்து கொண்டிருக்கிறது.

மேற்கண்டதெல்லாம் ரகசியமாக சிலருக்கு பாகவத் மறைபொருளாக சொன்னது அல்ல . அவர் இரண்டு நாள் உரை நிகழ்த்தினார். மூன்றாம் நாள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிலிருந்து சில விஷயங்களை பார்ப்போம். அவர் சொன்னார், உலக நாடுகளிடையே உயர்ந்த நிலையை இந்தியா எட்ட வேண்டும். ஆனால் பிற நாடுகளை தகர்த்து அழிக்காமல், தன் கொள்கைகளை ஏற்காதவர்களை வெட்டி வீழ்த்தாமல், தொன்மையான நாகரீகங்களை துடைத்தெறியாமல் , உலகின் உச்ச நிலையை எட்ட வேண்டும். உலகத்திற்கு ஆன்மீகத்தை வழங்குவதே இந்தியாவின் நோக்கம். இந்தியாவின் தொன்மையான ஞானம் ஒரு பிரிவினருக்கு சொந்தமானது என்று எப்போதுமே சொல்ல முடியாது . மாறாக இந்திய தத்துவ ஞானத்தின் சாரமானது உலகம் முழுமைக்குமானது. அது ஒன்றை விட மற்றொன்று உயர்வானது என்று எப்போதும் சொல்லியதில்லை என்று பாகவத் வலியுறுத்தி கூறினார்.

ஆர் எஸ் எஸ் ஸின் மற்றொரு உயர்ந்த தலைவரான தீனதயாள் உபாத்தியாயா , ‘ வாழ்க்கையை ஒருங்கிணைந்ததாக பார்ப்பது பாரதிய கலாச்சாரத்தின் அடிப்படை குணம். வேற்றுமையும் பன்முக தன்மையும் வாழ்க்கையில் உள்ள போதிலும் அதற்கு பின்னால் இருக்கும் ஒற்றுமையை கண்டறிவே நாம் முயன்று வருகிறோம்’, என்று கூறியுள்ளார்.

மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் மிகவும் செல்வ செழிப்புடன் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகமாக இருப்பது இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு ஒரு தடையாக உள்ளது என்று பாகவத் கூறினார். ராமர் கோவில் இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்ற போதிலும் அதேபோன்ற காசி, மதுரா கோவில் விடுதலை இயக்கத்தில் ஈடுபடாது என்றார். ஆனால் ஸ்வயம் சேவகர்கள் அந்த இயக்கத்தில் ஈடுபட்டால் ஆர் எஸ் எஸ் அதை தடுக்காது என்று தெளிவுபடுத்தினார்.

ஆர் எஸ் எஸ் ஸை பொறுத்த வரையில் இஸ்லாமிய படையெடுப்பில் பாதிக்கப்பட்ட அயோத்தியா , காசி , மதுரா மூன்று இடங்களும் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமான புனித ஸ்தலங்கள். அதற்கு அப்பால், ‘ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேடிக் கொண்டிருக்க தேவையில்லை’ என்றார். அத்துடன் ஆர்எஸ்எஸ் இன் தலைவரான தான் இந்த மூன்று இடங்களை மீட்பதற்கு அப்பால் வேறெதற்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவளிக்காது என்று வெளிப்படையாக அறிவித்த பிறகு முஸ்லிம் சமூகங்கள் நீண்ட கால கோரிக்கையான இவற்றை விட்டுக் கொடுப்பதை பற்றி முடிவு எடுக்க வேண்டும் . அது வரும் காலங்களில் எந்தவிதமான மோதலும் ஏற்படாமல் மையப் பாதையை ஏற்படுத்தி தரும் என்று கூறினார்.

ஆர் எஸ் எஸ் இன் கருத்தியலில் இருந்து கிளைத்தெழுந்த பாஜகவுடன் அதற்கு நெருங்கிய உறவு இருக்கிறது. என்றாலும் அதே கருத்தியலை ஏற்றுக் கொண்ட எவரையும் எந்த அமைப்பையும் ஆதரிக்க தயங்காது என்று பகவத் தெளிவுபடுத்தினார். ஆர் எஸ் எஸ் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. சமூகங்கள் உயர்வடையவும் அவற்றுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவும் உண்மையான சகோதரத்துவம் ஏற்படவும் அரசின் செயல்களுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். அவற்றை அரசால் செய்ய முடியாது , என்றார்.

தீவிர கம்யூனிசத்திற்கும் மிகையான முதலாளித்துவத்திற்கும் எதிராக எச்சரிக்கை விடுத்தார் பாகவத். இதை மற்றொரு ஆர் எஸ் எஸ் சிந்தனையாளரான தத்தோபந்த் தெங்கடி மேற்கண்ட இரண்டுடனும் ‘அணிசேரா’ பிரச்சாரத்துடன் இணைத்து பார்க்கலாம். மூன்றாவது வழி (1998) என்ற தலைப்பில் தெங்கடி மையப் பாதையை தேர்ந்தெடுப்பது பற்றி நூல் எழுதியுள்ளார்.

வோக் (Woke) பிரச்சாரம் மற்றும் எல்லாவற்றையும் மறுக்கும் கலாச்சாரத்தையும் (Cancel culture) மிக ஆபத்தானதாக ஆர் எஸ் எஸ் பார்க்கிறது என்றார் பாகவத் . சூழலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது – மேற்கத்திய நாடுகளில் உள்ள வலதுசாரிகள் சூழலியலை இடதுசாரி (கம்யூனிச) கருத்தாக பார்க்கிறார்கள். எனவே அதை ஏற்க மறுக்கிறார்கள் – மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

பாஜகவின் உள் விவகாரங்களில் ஆர் எஸ் எஸ் தலையிடுவதில்லை என்று கூறிய பாகவத் , கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பதை ஆர்எஸ்எஸ் முடிவு செய்வதாக இருந்தால் இவ்வளவு நீண்ட காலம் தாமதமாக இருக்காது என்றார்.

ஆரம்பம் முதலே அமைதியாக பின்னணியில் இருந்து வேலை செய்யும் ஆர் எஸ் எஸ் இப்போது ‘வெளிப்படையாக வந்திருக்கிறது’ என்று சுலபமாக சொல்லலாம். ஆனால் அவ்வாறு சொல்வது முன்யோசனையின்றி உணர்ச்சி வேகத்தில் சொன்னதாகிவிடும். மூன்று நாள் உரையில் பகவத் வலியுறுத்தி சொல்லியது போல் ஆர்எஸ்எஸ் இன் பணி பரந்த இந்திய சமுதாயத்தின் லட்சியங்களில் இருந்து வேறுபடாத, அதன் ஆதரவு பெற்ற பணியாகும்.

ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் வாதங்கள் இன்று இந்தியாவிலும் உலகளவிலும் பலத்த எதிரொலியை எழுப்பி வருகின்றன. மேம்போக்கான வளர்ச்சிகளால் களைப்படைந்து, மரபான பண்புகளை ஏற்க ஏங்கும், மெதுவாக மாறிவரும் உலகில் இது இயல்பானது. எனவே, இதற்கு முன்பில்லாத வகையில் கேட்க தயாராக உள்ள சமுதாயத்திற்கு ஆர் எஸ் எஸ் தன் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் முன்வைக்கிறது.

நன்றி : சண்டே கார்டியன்


இந்தோல் சென்குப்தா பல விருதுகளைப் பெற்ற வரலாற்றாளர். ஆன்மாவும் வாளும் என்ற நூல் உட்பட பதிமூன்று நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories