இரண்டாம் உலகப் போரின் போது தென் கிழக்கு ஆசியாவில் கூட்டுப்படைகளின்
தளபதியாக பணியாற்றி வெற்றி வாகை சூடியவர் லூயி மவுண்பேட்டன்.
ராஜ வம்சத்தைச் சேர்ந்த அவர் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து
பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் பரிபூரணமான நம்பிக்கையையும்
அன்பையும் பெற்றுத் திகழந்தவர்.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற போதும், 1945 ஆம் நடந்த தேர்தலில் சர்ச்சில் தோல்வியை தழுவினார். அட்லி இங்கிலாந்தின் பிரதமரானார். அட்லி பாரதத்திற்கு சுதந்திரம் அளிக்கும் விஷயத்திற்கு முன்னுரிமை அளித்தார்.
பாரதத்தில் அன்றிருந்த அசாதாரண சூழ்நிலையில், மவுண்ட்பேட்டன் போன்ற ராணுவ
பின்னணி உள்ளவர் வைஸ்ராயாகச் சென்று, பாரதத்திற்கு சுதந்திரம் அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செய்து விட்டு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அரசு கருதியது.
1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ந் தேதி,பாரதத்தின் கடைசி வைஸ்ராயாக
மவுண்ட்பேட்டன் பொறுப்பேற்றார். 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, பாரதத்திற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை அந்த பதவியில் நீடித்தார். பின்னர், காங்கிரஸ் அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சுதந்திர பாரதத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 1948 ஆம் வருடம் ஜூன்
மாதம் 21ஆம் தேதி வரை கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தார். மவுண்ட்பேட்டனுக்கு இங்கிலாந்து அரசால் கொடுக்கப்பட்ட இலக்கு 1948 ஆம் வருடம் ஜூன் மாதத்திற்குள், பாரதத்திற்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என்பதே.
ஒரு ராணுவ தளபதியின் மிடுக்குடன், கம்பீரத்துடன், வெகு சுலபமாக தான் வந்த
காரியம் முடிந்து விடும் எனக் கருதிய மவுண்ட்பேட்டனுக்கு பெரும் சவால்
காத்திருந்ததை இங்கு வந்த பின் தான் உண்ர்ந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களான காந்தி, நேரு போன்றோர், மவுண்ட்பேட்டனின் வசீகர, கம்பீர தோற்றம் மற்றும் பேச்சுக்கு உடனே மயங்கி விட்டனர்.
அவர் நியாய உணர்வு மிக்கவர் எனும் எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. சுதந்திர இயக்கத்தை முன் நின்று நடத்தி வந்தது காங்கிரஸும் அதன் முன்னணி தலைவர்களான காந்தியும் நேருவும் தான். அவர்கள் தன்வயப்பட்டு தான் சொல்வதையெல்லாம் ஏற்கத் தயாராகி விட்டதால் தான் வந்த வேலையில் சுலமாக வெற்றிப் பெற்றுவிட்டோம் என இறுமாப்பு கொண்ட மவுண்ட்பேட்டன் தலையில் ஓங்கித் தட்டியவர் முகமது அலி ஜின்னா தான்.
ஜின்னா, மவுண்ட்பேட்டனை சற்றும் மதிக்கவில்லை. மவுண்ட்பேட்டன் என்ன சொன்னாலும் தங்கள் நன்மைக்கே என காந்தி, நேரு ஆகியோர் கருதினர். படேலும் கூட மவுண்பேட்டனின் ’ ஒரு விஷயத்தை ஏற்க வைக்கும் திறன் முன் விழுந்து விட்டார் என்றே கூற வேண்டும்.
முஸ்லீம்கள் தனி தேசிய இனம் ’என்றும், தங்களால் பெரும்பான்மை ஹிந்துக் களுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், ஆகவே பாரதத்தை பிளந்து தங்களுக்கு என்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தர வேண்டும் என்றும் முஸ்லீம்
தலைவராக இருந்த ஜின்னா விடாப்பிடியாக இருந்தார்.
ஜின்னாவின் எண்ணத்தை தன்னால் மாற்ற முடியவில்லை என்றும், ஆகவே பாரதம்
துண்டாடப்பட ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் மவுண்ட்பேட்டன் காங்கிரஸ் தலைவர்களிடம் கூறி விட்டார். மவுண்ட்பேட்டனாலேயே ஒரு காரியம் சாத்தியம் இல்லையென்றால் அது தங்களுக்கோ, வேறு யாருக்குமோ சாத்தியம் இல்லை என்றும் காங்கிரஸின் முன்னணி தலைவர்களான காந்தியும் நேருவும் கருதினர்.
காங்கிரஸ் எப்போதுமே தன்னை ஒரு ஹிந்துக்களின் கட்சியாக கருதியதில்லை! பாரதத்தை ஒரு ஹிந்து நாடாக கற்பனை செய்தும் பார்க்கவில்லை. காங்கிரஸ் தன்னை ஒரு மதச்சார்பற்ற அமைப்பாகவே கருதியது. பாரதமும் ஒரு
மதச்சார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும் என்றும் கருதியது.
“என்னை துண்டாடி விட்டு நாட்டை துண்டாடுங்கள்‘’ என வீர வசனம் பேசிய
காந்தியின் கண் முன்னே பாரத அன்னையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன.
பாகிஸ்தான் உருவாக காங்கிரஸ் தலைவர்களான காந்தி , நேரு ஆகியோரே
ஒப்புக் கொண்டனர்.
தேச பக்தர்களோ… காந்தி, நேரு போன்றவர்களின் கையாலாகாத் தனத்தைக் கண்டு
கலங்கிப் போயினர், துடித்துப் போயினர். முஸ்லீம்களுக்கு இந்த மனோபாவம் உருவாகக் காரணமானவர் யார் ?
காந்தி! காந்தியேதான்!
( பகுதி 3…தொடரும் )
எழுத்து: யா.சு. கண்ணன்