மூளைச்சலவையா – கட்டுரை: ஆர்.நடராஜன்
தேர்தல் யுக்திகளை காங்கிரஸ் கட்சி இப்போதே தொடங்கிவிட்டது என்று தெரிகிறது. வழக்கமாக நேரு குடும்ப மகிமையை சிலாகித்துப் பேசும் காங்கிரஸ்காரர்கள் இப்போது ஜோசியத்தைத் தேர்தல் யுக்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எது மக்களிடம் எளிதில் போய்ச் சேரும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். கருத்துக் கணிப்பை தேர்தலுக்குச் சற்று முன்னதாக வைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ஜோசியம் மூலம் ராகுல் தான் பிரதமர் என்ற மூளைச்சலவை செய்து வருகிறார்கள்.
அரசியல் கட்டுரைகள் எதுவும் எழுதியிராத ஒரு சமயப் பத்திரிக்கை ராகுல் காந்தியின் ஜாதகத்தை அலசி அவர் தான் அடுத்தப் பிரதமர் என்று சொல்கிறது. ஜோசியம் பொய்யோ? மெய்யோ? ஜோதிடம் சில இடங்களில் எடுபடும் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு ஜோசியர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தால் அதில் ஜோசிய பாஷைதான் வந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையில் அரசியல் நெடி தூக்கலாக இருக்கிறது. யாரோ ஒரு அரசியல்வாதிதான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொடுத்திருக்கக் கூடும் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ராகுல் காந்தியை தியாகத்தில் புடம்போட்ட நேரு குடும்பத்தின் உன்னதமான வாரிசு என்று கட்டுரை புகழ்கிறது. அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவன் வீட்டை தேசத்திற்குக் கொடுத்தது தியாகம் என்றும் கட்டுரை சொல்கிறது. வீட்டைக் கொடுத்து விட்டு நாட்டை விழுங்கிய தியாகத்தை ஜோசியத்தின் எந்தப் பிரிவும் சொல்லவில்லையோ?
சோனியா காந்தி கட்சியின் சொத்தான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையையும் அதன் கட்டடத்தையும் வாங்கியதில் கட்சிக்காரர்களின் உழைப்பைத் தியாகம் செய்தார். சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரத்தில் அரசாங்க விதிமுறைகளைத் தியாகம் செய்தார். சோனியாவின் கணவர் ராஜிவ் காந்தி போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நியாயமான வியாபார நெறிமுறைகளைத் தியாகம் செய்தார். ராஜிவின் தாயார் இந்திராகாந்தி தன்னை விட மூத்தவர்களான கட்சித் தலைவர்களின் மேலான மதிப்பையும் மரியாதையையும் தியாகம் செய்தார். எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயகத்தைத் தியாகம் செய்தார். தன் மகன் சஞ்சய் காந்திக்காக நிர்வாகக் கட்டுக்கோப்பையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் தியாகம் செய்தார்.
இந்திராவின் தந்தையும், முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, தன் நண்பரும், அப்போதைய பாதுகாப்பு மந்திரியுமான வி.கே.கிருஷ்ணமேனன் ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் செய்தார் என்ற புகார் வந்தபோது நட்புக்காக நேர்மையைத் தியாகம் செய்தார். சீனாவுடன் போரிட்டதில் வீரத்தைத் தியாகம் செய்தார். சோஷலிசம் என்று சொல்லி பொருளாதாரத்தைத் தியாகம் செய்தார். தியாகம்…தியாகம்…தியாகம்…எவ்வளவு தியாகம்
இப்படித் தியாக பரம்பரையில் வந்துள்ள ராகுல் காந்தி தப்பித்தவறி பிரதமரானால் எதை எதையெல்லாம் தியாகம் செய்வாரோ? பயமாக இருக்கிறது. தன் ஜாதகப்படி ராகுல் காந்தி பிரதமரானால் நாட்டின் ஜாதகம் சரியில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இருந்தாலும் ராகுல் பிரதமரானால் என்ற பயம் நம்மை வாட்டுகிறது. அது நம் தலைவிதி என்றால் இந்த காசபிமான விதியை தேசாபிமான மதி தோற்கடிக்கட்டும் என்பதே நம் பிரார்த்தனை.
லஞ்சம், தியாகம் எனப் பேசப்படுவதற்கு மூல காரணம் யார்? நேரு குடும்பத்தை சேர்ந்த எவரும் இல்லை. பழியையெல்லாம் ஏற்க வேண்டியவர் அட்வகேட் மோ.க.காந்தி. யாரென்று தெரிகிறதா? அவர்தான் கட்சியிலும், ஆட்சியிலும் நேரு குடும்பத்தை நிலைநிறுத்திய மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி. Ôமோதிலால் நேருவை கட்சித் தலைவராக ஆக்கியவர். அவரையடுத்து அவரது மகன் ஜவஹர்லால் நேருவை கட்சித்தலைவராக்கியவர். எளிமையான சர்தார் வல்லபாய் பட்டேலை ஒதுக்கிவிட்டு நேருவை பிரதமராக்கியவர். நேரு காலத்தில் இருந்து இன்று வரை காங்கிரஸ் ஆட்சியில் தேசம் சந்திக்கும் எல்லாவித இன்னல்களுக்கும் காரணம் இந்த வக்கீல் காந்தி தான். ஏனென்றால் அவரே கட்சியில் ஜனநாயகவாதியாக இருந்ததில்லை. ஜிலீமீ ணிஸ்வீறீ tலீணீt னீமீஸீ பீஷீ றீவீஸ்மீs ணீயீtமீக்ஷீ tலீமீனீ என்ற ஷேக்ஸ்பியரின் அமர வாசகத்தை மிகச்சரியாக நிரூபித்துள்ளவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான். எல்லா காந்திகளும் ஒரே லட்சணம்தான் என்ற அவல விதிக்கு மூல நாயகர் இந்த காந்திதான். வேறு யாரும் இல்லை.
நன்றி: துக்ளக்