டாக்ஸி அவர்களை இறக்கி விட்ட பிறகு,ரீகல் சினிமா அரங்கின் முன்புறமாக இருந்த திறந்தவெளி வழியாக நடந்து சில மரங்களின் கீழ் வந்து நின்றனர் ஆப்தே, நாதுராம், கார்கரே மற்றும் கோபால் கோட்ஸே.
ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அவர்களின் மனம் மரத்து போய் விட்டது.
உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி யோசிக்கலாயினர்.
மதன்லால் பஹ்வாவை அப்படியே விட்டுச்செல்ல கார்கரே தயாராக இல்லை. இன்னொரு நாள் டெல்லியில் தங்கி அவருக்கு எவ்வகையிலாவது உதவமுடியுமா என்று முயன்று பார்க்க எண்ணினார்.
அதன் பிற்கு பம்பாய் சென்று,அங்கு சில காலம் அமைதியாக இருக்கலாம் என்றும் தீர்மானித்தார்.
கோபால் கோட்ஸே பூனாவிற்கு திரும்பி,அங்கு தன் அலுவலகப் பணியை தொடர எண்ணினார்.அடுத்த நாள் காலையில் புறப்படவிருந்த பஞ்சாப் மெயிலில் அவர் பயணிக்கத் தீர்மானித்தார்.
ஆப்தேயும் நாதுராமும் டெல்லியை விட்டு அன்றிரவே புறப்பட்டு பம்பாய் அல்லாத வேறு ஒரு இடத்திற்கு போவதென தீர்மானித்தனர்.
பரஸ்பரம் ஒவ்வொருவரும்,தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொள்ளும் விதமாக கைகளை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து பிரிந்தனர்.
ரிவால்வர்கள் இருந்த அந்த மூட்டை கோபால் கோட்ஸேயிடம்தான் இருந்தது.அதை அவர் தன்னுடன் கொண்டுசென்றார்.
அவர் அப்படி செய்ததற்கு வெகு விரைவிலேயே வருந்த வேண்டிவந்தது.
ஆப்தேயும் நாதுராமும் மெரினா ஹோட்டலுக்கு நடந்தே சென்றனர்.லாண்டரியில் தாங்கள் சலவைக்கு போட்டிருந்த துணிகளைப் பற்றி கேட்க வேண்டாம் என்று தீர்மானித்து அப்படியே விட்டுவிட்டனர்.
கார்கரேயும் கோபால் கோட்ஸேயும் ஒரு காஃபி கடையில் சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு ஒரு ‘ டோங்கா ‘ வில் ஹிந்து மஹா சபா பவனுக்குச் சென்றனர்.
அங்கு ஏற்கெனவே,திகம்பர் பாட்கே வந்து தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டிருந்தார்.
அவர்களும் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு பழைய டெல்லியில்,’ ரயில் நிலையம் அருகேயிருந்த FRONTIER HINDU HOTEL ‘ எனும் ஒரு மலிவு ஹோட்டலில் ஒரு அறையை ஒரு நாள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டனர்.
ஹோட்டல் ரிஜிஸ்டரில்,கோபால் கோட்ஸே தன் பெயரை,’ ராஜகோபாலன் ‘ என்றும்,கார்கரே தன் பெயரை ‘ ஜி.எம்.ஜோஷி ‘ என்றும் பதிவிட்டனர்.
பிர்லா ஹவுஸிற்கு வெளியே வந்தவுடன்,திகம்பர் பாட்கே ஒரு ‘ டோங்கா ‘ வை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஷங்கர் கிஷ்டய்யாவுடன்,ஹிந்து மஹா சபா பவனிற்கு வந்தார்.தங்கள் ‘ லக்கேஜ் ‘ இருந்த கார்கரேயின் அறைக்கு அவர்கள் சென்றனர்.
தன்னுடைய படுக்கையை கட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கிய திகம்பர் பாட்கே,
தங்கள் வசமிருந்த இரண்டு துணி பைகளிலிருந்த வெடிகுண்டுகளையும்,வெடிப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு,
ஹிந்து மஹா சபா பவனின் பின்புறமிருந்த காட்டுப்பகுதியில் எங்காவது பள்ளம் தோண்டி அவற்றை புதைத்து விட்டு வரும்படியாக ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு உத்தரவிட்டார்.
ஷங்கர் கிஷ்டய்யா சென்றபிறகு,ஒரு டாக்ஸியில் பவனுக்கு வந்த ஆப்தேயும்,நாதுராமும்,திகம்பர் பாட்கே ஏன் அப்படி தன்னுடைய பங்கை செய்யாமல் ஓடினார் என்று கேட்டனர்.
அவர்களிடம் கேவலமாக பேசிய பாட்கே அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி ஏசினார்.
அந்த சமயத்தில் வேறெதுவும் செய்ய முடியாததால் அவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
ஷங்கர் கிஷ்டய்யா திரும்பியவுடன் அவருடன் திகம்பர் பாட்கே ஒரு ‘ டோங்கா ‘ வில் புது டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக இருக்கவே,அங்கிருந்து பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு அவர்கள் சென்றனர்.
அங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக இல்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் பம்பாயிற்கு புறப்பட ஒரு ரெயிலும் தயாராக இருந்தது.
கும்பல் அதிகமாக இருந்த ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறிய அவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு பூனா போய் சேர்ந்தனர்.
( தொடரும்