பிர்லா ஹவுஸ் பணியாளர்கள் QUARTERS ல் அறை எண் 3ல் தங்கியிருந்த சோட்டுராம் போலீசாரிடம் கூறுகையில்…. சிலர் தன்னிடம் வந்து தன் அறையிலிருந்த சிமெண்ட் ஜாலி வழியாக காந்தியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
வந்தவர்களைப்பற்றி அவர் கூறிய அங்க அடையாளங்கள்,மதன்லால் பஹ்வா கூறியதை ஒத்திருந்தது.
மதன்லால் பஹ்வா கைதுசெய்யப்பட்ட 3 மணி நேரத்திற்குள்ளாக காந்தியை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது என்பது போலீஸிற்கு தெரிந்து விட்டது.
இதற்கான இறுதிக்கட்ட திட்டமிடுதலும் அறிவுறுத்தல்களும் மெரினா ஹோட்டலில் ஒரு அறையில் நடந்திருக்கிறது என்பதும் வெளிப்பட்டுவிட்டது.
அன்று இரவு வெகு நேரம் கழித்து ,மதன்லால் பஹ்வா மெரினா ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னாளில் மெரினா ஹோட்டலின் மேனேஜர் C.PACHECO தன் வாக்குமூலத்தில் கூறினார் :
’’ அவரை அழைத்து வரும்போது அவர் முகத்தை துணியால் மறைத்திருந்தார்கள்.கைவிலங்கிடப்பட்டிருந்தது.அவருடைய நண்பர்கள் தங்கியிருந்த அறைக்கு தங்களை அழைத்துச்செல்லும்படி போலீசார் அவரிடம் கூறினார்கள்.அவர் அவர்களை அறை எண் 40ற்கு அழைத்துச் சென்றார் ‘’.
போலிசார் சாட்சிகளாக சிலரை அழைத்தனர்.அவர்கள் முன்னிலையில் அறையை சோதனையிட்டனர்.
அங்கிருந்த ஒரு மேஜையின் ட்ராயரில் TYPE செய்யப்பட்டிருந்த ஒரு காகிதம் கிடைத்தது.
அது,ஹிந்து மஹா சபாவின் பொதுச்செயலாளர் அஸுதோஷ் லஹிரி,காந்தி தன் உண்ணாவிரதத்தை கைவிட முன் வைக்கப்பட்ட 7 அம்சதிட்டத்தை தங்கள் கட்சி ஏற்கவில்லை என்பதை விளக்கி விடப்பட்டிருந்த அறிக்கையின் நகல்.
பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது,போலீசார் இந்த அறிக்கை நகலை ஒரு EXHIBIT ( ஆதாரம் ) ஆக வைத்தபோது,வழக்கை நடத்திய நீதிபதி ஆத்மசரண் அதை அனுமதிக்க மறுத்தார்.
அது அரசு தரப்பிற்கோ,குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பிற்கோ சாதகமாக இல்லை என கூறி அதை நிராகரித்தார்.
ஆனால் விசாரணை நடந்து வந்த நேரத்தில்,காந்தியை கொல்ல நடந்த சதியில் ஹிந்து மஹா சபாவிற்கும் பங்கிருக்கிறது என போலீசார் சந்தேகித்தனர்.ஹிந்து மஹா சபா என்றால்….. அது சாவர்க்கரை நோக்கி அவர்களை அழைத்துச்சென்றது.
அறை எண் 40ல்,தங்களின் சோதனையை முடித்து ,சாட்சிகளின் முன்னிலையில் அங்கு கைப்பற்றப்பட்டவைகளைப் பற்றிய விவரங்களை ரிஜிஸ்டர் செய்வதற்குள் நள்ளிரவை கடந்துவிட்டது.
ஆனால்,மதன்லால் பஹ்வாவிடம் விசாரணை தொடர்ந்தது.
அவரை தூங்கவிடாமல் தடுப்பது அவசியமாக இருந்தது.
அவரை விசாரித்த அதிகாரிகளில் ஒருவரின் கேஸ் டைரியில் பதிவுச்செய்யப்பட்ட விவரங்களில்…’’ அவர் மெல்லிய,தாழ்ந்த குரலில் பேசினார்’’ என்று பதிவிடப்பட்டிருக்கிறது.
அடுத்த நாள் விடியற்காலையில்,மதன்லால் பஹ்வா பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காலை நேரத்தில்,பம்பாயிற்கு இரண்டு ரெயில்கள்,டெல்லியிலிருந்து புறப்படும்.
ஒன்று 8 மணிக்கு FRONTIER MAIL.இரண்டு,9 மணிக்கு பஞ்சாப் மெயில்.
கோபால் கோட்ஸே இரண்டாவது ரெயிலில் பயணிப்பதாக இருந்தார்.அவரை வழியனுப்ப கார்கரே வந்திருந்தார்.
மூன்றாம் வகுப்பு பெட்டியில்,ஒரு சீட் பிடித்து விட்ட கோபால் கோட்ஸே,தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ்,இரண்டு ரிவால்வர்கள் மற்றும் வெடிகுண்டு ஆகியவை இருந்த துணிப்பையை வைத்தார்.
துணிப்பையை வைத்துவிட்டு,அவரும் கார்கரேயும் பிளாட்பார்மிலிருந்த டீ கடைக்கு காலைச் சிற்றுண்டி சாப்பிடச் சென்றனர்.
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்