பின்னாளில் கோபால் கோட்ஸே இந்த நிகழ்வைப்பற்றி நினைவுகூர்கையில் கூறினார் :
‘’ கார்கரேயும் நானும் சிற்றுண்டி சாப்பிட அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு போலீஸ் படை ஒரு மனிதனை தலையும் ,முகமும்,தோள்களும் ஒரு பழுப்பு நிற போர்வையால் மறைத்திருந்த வண்ணம் அழைத்து வந்தார்கள்.
அந்த போர்வையை அவர்கள் விலக்கும் முன்னரே அந்த மனிதன் மதன்லால் பஹ்வா என்பது எங்களுக்குத் தெரிந்து விட்டது.
அவன் எங்களுடைய பெயர்களை போலீசாருக்கு தெரிவித்து விட்டான்.எங்களை அடையாளம் காட்டுவதற்காக அவனை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்துவிட்டது.
அந்த தேனீர் விடுதி 40 அடிக்கு 30 அடி அளவில் பெரியதாக அமைந்திருந்தது.
அங்கே கூட்டமும் இல்லை.
மதன்லாலை விடுதிக்குள் சுற்றிலும் பார்க்கச் சொன்னார்கள்.யாரையாவது அவன் அடையாளம் காண்கிறானா என்று அவன் கண்களையே இரு போலீஸ்காரர்கள் பார்த்தவண்ணம் இருந்தார்கள்.
ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு இல்லையென்று தலையசைவால் பஹ்வா தெரிவித்தான்.
அவனுடன் பாதுகாப்பிற்கு வந்தவர் மீண்டும் போர்வையால் அவன் தலையையும்,முகத்தையும் மறைத்து அவனை வெளியே அழைத்துச் சென்று விட்டார்.
எங்கள் அதிர்ஷ்டம் எங்கள் திசையில் அவன் பார்க்கவில்லை ‘’.
ஆனால் கோபால் கோட்ஸே கூறியது சரியல்ல.
தலையிலிருந்து போர்வை விலக்கப்பட்டவுடனேயே கோபால் கோட்ஸேயையும்,தன்னுடைய ஆருயிர் நண்பரான கார்கரேயையும் மதன்லால் பஹ்வா பார்த்துவிட்டார்.
ஆனால் அங்கிருந்த அனைவரையும் உற்றுபார்த்ததுபோல இவர்களையும் உற்றுபார்த்துவிட்டு அதன் பின்தான் அவர்கள் அங்கு இல்லையென்று தலையசைத்தார்.
அவரை வெளியே அழைத்துச்சென்ற போலீசார்,ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக அழைத்துச்சென்று தேடுதல் வேட்டையை நடத்தினார்கள்.
ரெயிலின் கடைசி பெட்டிக்கு அவர்கள் சென்றபிறகு கோபால் கோட்ஸே நிதானமாக தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.
மதன்லால் பஹ்வா கைதானச் செய்தி அவருடைய பம்பாய் நண்பரான பேராசிரியர் Dr.J.C.ஜெயினை எட்டியது.
ஜெயினின் நண்பர்கள் பலருக்கு,மதன்லால் பஹ்வா ஜெயினின் நண்பர் என்பது தெரியும்.
அதிலும் குறிப்பாக அங்கத் சிங் என்பவரிடம் Dr.ஜெயின் ,மதன்லால் பஹ்வா,காந்தியை கொல்லத் திட்டமிட்டிருப்பதாக தன்னிடம் தெரிவித்தாகக் கூறியிருந்தார்.
ஆனால் மதன்லால் பஹ்வா தன்னிடம் பேசியிருந்ததைப்பற்றி Dr.ஜெயின் போலீசாரிடம்
அப்போது எதுவுமே கூறாமல் விட்டுவிட்டார்.
ஆனால் இப்போது அவருக்கு பயம் பற்றிக்கொண்டு விட்டது.
தன்னிடம் தெரிவித்திருந்ததைப் பற்றி தன் வாக்குமூலத்தில் பஹ்வா கூறியிருந்தால்…
தன் மெளனம் தனக்கு ஆபத்தாக முடியுமோ என அஞ்சினார்.
அப்போது ஜெயினிற்கு வயது 40 .ஹிந்தி மொழியில் PH.D பட்டம் பெற்றவர்,ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.
கல்வியறிவு உடையவர்,நல்ல சமூகப்பின்னணி உள்ளவர்.
ஒரு குடிமகனாக தன் கடமைகளையும் பொறுப்புகளையும் நன்கு அறிந்திருந்தவர்.
மதன்லால் தன்னிடம் காந்தியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியபோது,ஒரு அகதி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களின் காரணமாக ஏதோ பிதற்றுகிறார் என்று எண்ணி அதைப்பொருட்டாக எண்ணாமல் தள்ளியிருந்தாலும்,
இப்போது மதன்லால் பஹ்வா பிடிப்பட்டுவிட்டபிறகு,
தனக்குத்தெரிந்ததை அதிகாரத்திலிருந்த யாரிடமாவது தெரிவிக்கவேண்டியது தன் கடமையென்று எண்ணினார்.
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்