மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த விவாதத்தில் தி மு க உறுப்பினர் ஆ .ராசா , “மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறீர்கள், ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு துறைகளில் நீதிபதிகளை நியமித்து, அந்தந்த பகுதிகளின் சமூக, பொருளாதார அடிப்படையில் யார் யாருக்கு, எந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று நிர்ணயம் செய்திருக்கிறோம்.ஆனால், நீங்கள் தான் ஏதோ முதல்முதலாக இதை செய்திருப்பது போல் பேசுகிறீர்கள்”. என்றும் ” “எம் பி பி எஸ் படிப்பை முடித்தவுடன் ஒரு நுழைவு தேர்வு (NEXT) எழுத வேண்டும் என சொல்கிறீர்கள். அந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லையெனில், நான் மருத்துவராக பணிபுரிய முடியாது என்கிறீர்கள். நான் மருத்துவ படிப்பை முடித்து விட்டேன். மேற்படிப்பு தொடர விரும்பவில்லை. என்னிடம் பணம் இல்லை, என் பெற்றோர் வசதியில்லாதவர்கள். மருத்துவம் படித்தும் நான் பணியாற்ற முடியாதா?” என்று கேட்டார்.
அதற்கு சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், ” ஆ. ராசா அவர்களே, நீங்கள் ஏன் இவ்வளவு குழம்பி போயுள்ளீர்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே இருந்த மருத்துவ கவுன்சிலில் கட்டண நிர்ணயம் இருந்ததில்லை. ஆனால் தற்போது 50 விழுக்காடு இடங்களுக்கு கட்டண நிர்ணயம் செய்துள்ளோம். மீதியுள்ள 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டண நிர்ணயத்தை அந்தந்த மாநில அரசுகள், மருத்துவ கல்லூரிகளோடு பேசி முடிவு செய்வார்கள்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலை இருக்கும். அதிகளவு தனியார் மருத்துவ கல்லூரிகளை சில மாநிலங்கள் ஊக்குவிக்கும் சூழ்நிலையில், அதற்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளும். மாநில அரசுகள் அதற்கான விதிகளை மேற்கொள்ளும்” என்றும், “எம் பி பி எஸ் படித்தவுடன் “NEXT” தேர்வு எழுத வேண்டும். உயர் கல்விக்கான நீட் தேர்வு இல்லை. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், மருத்துவராக பணியாற்றலாம் அல்லது மேல் படிப்புக்கு அனுமதி பெறுவார்கள். இதில் தேர்ச்சி பெறவில்லையெனில் உறுதியாக மருத்துவராக பணியாற்ற முடியாது” என்று தெளிவுபட கூறியுள்ளார்.
மிக தெளிவாக அந்தந்த மாநிலங்கள், 50 விழுக்காடு இடங்களுக்கான கட்டண நிர்ணயத்தை செய்து கொள்ளட்டும் என்று தெளிவு பட பேசும் போது, மாநில உரிமைகளை பறிக்கிறது என்று கிளிப்பிள்ளை போல், சொன்னதையே சொல்லி கொண்டிருப்பது விதண்டாவாதம். சட்டம் படித்தவர்கள் தேர்வு எழுதி தானே வழக்கறிஞர்களாக முடியும். அப்போது அதை எதிர்க்காதவர்கள் இப்போது மருத்துவ தேர்வை எதிர்ப்பது ஏன்? ஐந்து வருடங்கள் பட்டப்படிப்பை படித்தவர்களால், பணிக்காக ஒரு தேர்வு எழுத முடியாதா? ஒரு வேலைக்கான தகுதி, இளங்கலையில் பொருளாதாரம் என்று ஒரு நிறுவனம் நிர்ணயம் செய்தால் , அந்த படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை வைத்து பணியமர்த்தி விடுகின்றதா? தேர்வு அல்லது நேர்காணல் நடத்தியே பணியில் அமர்த்துகிறார்கள். மேலும் தமிழ் நாடு அரசு பணிகளுக்கு கல்வி தகுதியை மட்டுமே வைத்து பணி அமர்த்துகிறதா? தமிழ் நாடு பொது சேவை ஆணையம் மூலம் தேர்வு நடத்தியே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகைக்கு தேவையான மருத்துவர்கள் தேவை என்பதை உணர்ந்தே மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை இந்த மசோதாவின் மூலம் கொண்டு வருகிறது. ஆனால், பாஜக எந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்ற நிலையில் இருந்து தி மு கவும் மற்ற எதிர்க்கட்சிகளும் மாறவேண்டியது, வருங்கால இளைய சமுதாயத்தின் நலன் கருதி அவசியம்.
- நாராயணன் திருப்பதி (பாஜக., பிரமுகர்)