கால் கடுவன் சரியாக…
குழந்தைகளுக்குக் கால்களில் ஒரு வகைப் புண் ஆறாமல் அரித்து நீர் வடியும். இதற்கு கால் கடுவன் என்று பெயர். சோற்றுக் கற்றாழையைப் பிளந்து சோற்றை எடுத்து அதன் மீது வைத்துக் கட்ட இரண்டொரு நாள்களில் ஆறிவிடும்.
கால் வீக்கமா?
காட்டாமணக்கு இலைகளைக் கொண்டு வந்து இரும்புச் சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கி பொறுக்கும் சூட்டுடன் கால் வீக்கத்தின் மீது வைத்துக் கட்டி வர சில நாள்களில் சரியாகி விடும்.
பாதங்களில் நீர் இறங்கி வீக்கமாய் இருந்தால் வெள்ளாட்டுப் புழுக்கையை இலேசாக வறுத்து காடி விட்டு அரைத்து வீக்கத்தின் மேல் பற்றுப் போடவும். சில நாள்களில் வீக்கம் கரைந்துவிடும்.
கிரந்தி குணமாக…
வெண் கொடுவேலியின் வேர், பூரம், ஓமம் முதலியவற்றை சம எடை எடுத்து மூன்றின் மொத்த எடையளவு பனைவெல்லம் சேர்த்து சுமார் ஆறுமணி நேரம் அரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக் கொண்டு காலையில் ஒரு மாத்திரை சாப்பிட்டு வர கிரந்தி (சிஃபிலிஸ்) நோய் குணமாகும். ஆறாத மேக ரணங்களும் ஆறும்.
குன்ம வயிற்று வலிக்கு…
வாய்வுத் தொல்லைகள், குன்ம வயிற்று வலிகள், ஜீரணக் கோளாறு. உடல் பலவீனம். பசியின்மை முதலிய நோய்களுக்கு வில்வ இலையை உலர்த்தித் தூள் செய்து பசும்பால் விட்டுக் காய்ச்சி போதுமான அளவு பனை வெல்லமும் நெய்யும் சேர்த்து லேகியப் பதமாய் செய்து சாப்பிட்டு வர குணம் தெரியும்.
குழந்தை மண்ணைத் தின்கிறதா?
துளசி 50 கிராம், கடுக்காய்த் தோல் 50 கிராம், கீழாநெல்லி வேர் 25 கிராம் இவற்றை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு ஒரு பாலாடை அளவு புளித்த மோரில் 10 கிராம் மருந்தைக் கலக்கி மூன்று நாள்களுக்கு காலை மாலை கொடுக்கவும். அதன் பின் மண், சாம்பல் தின்னாது.