புது தில்லி: எங்களை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசத்துடன் கூறினர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்த்ர யாதவ் இருவரும். யோகேந்திர யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நிர்வாகக் குழுவில் நடந்த வாக்கெடுப்பு மோசடியானது. முன் கூட்டியே தீர்மானத்தை ரகசியமாகத் தயாரித்து வைத்து நிறைவேற்றியுள்ளனர். திட்டமிட்டு ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. ஆம் ஆத்மியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. எங்களை ஆதரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்” என்றார் ஆவேசத்துடன். பிரசாந்த் பூஷண் இதுகுறித்துக் கூறுகையில், நான் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. கூட்டத்துக்கு குண்டர்களை அழைத்து வந்து எங்களின் ஆதரவாளர்களைத் தாக்கினார்கள். இந்த கூட்டமே முழுவதும் சட்ட விரோதமான ஒன்றுதான் என்றார். முன்னதாக, ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் இருவரும் இன்று காலை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் யோகேந்திர யாதவ் ஆதரவாளர்களான ஆனந்த குமார், அஜித் ஷா இருவரும் நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
ஜனநாயகப் படுகொலை: செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பூஷண், யாதவ்
Popular Categories