மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், கொல்லப்பட்ட தாய் மற்றும் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் உடல்களுடன் 3 வயதுக் குழந்தை 11 மணி நேரமாக கதறி அழுதபடி இருந்தது காண்பவர் கண்களைக் குளமாக்கியது!
நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து குவாலியர் காவல்துறையினர் கூறுகையில், வேலையில்லாமல் இருந்த சத்யேந்திர சௌஹானுக்கும், மனைவி அன்ஷுவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது. இதில் சத்யேந்திரா மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராணுவ அதிகாரியான தனது சகோதரரின் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த 3 வயது குழந்தை அதிர்ச்சியில் உறைந்தது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டில், தாத்தா பாட்டி என எவரும் இல்லாத நிலையில், பெற்றோர் மரணம் அடைந்து விட, அவர்களது உடல்களுடன் 11 மணி நேரம் பசியால் வாடிய அந்த 3 வயது குழந்தை தன்னந்தனியாக தவித்துக் கதறி அழுது துடித்துள்ளது.
சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்ஷுவின் தந்தை தனது மகளுடன் பேச வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்க, தொலைபேசிய எடுத்த குழந்தை, “அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள், எனக்கு மிகவும் பசிக்கிறது, சீக்கிரம் வாங்க தாத்தா” என்று சொல்ல, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் அபே படோரியா.
நடந்த சம்பவம் குறித்து 3 வயது குழந்தை காவல்துறையிடம் முழுமையாக விளக்க, இரண்டு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.