ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது விவசாயிகள் செருப்புகளை வீசி வெளிப்படையான தாக்குதல் நடத்தினர்.
ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக அங்கே கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு அந்த இடமே சுடுகாடாக காட்சியளிப்பதாக தமக்கு தகவல் வந்ததாகவும், அதனால் அமராவதி பகுதியை பார்வையிடச் செல்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
இதன்படி காலை தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பேருந்தில் அவர் அமராவதிக்குச் சென்றார். அவர் சென்ற பஸ், வெங்கடபள்ளம் பகுதியில் சென்ற போது, விவசாயிகள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சேர்ந்து பேருந்தை வழிமறித்தனர்.
அமராவதியில் தலைநகரை ஏற்படுத்துவதற்கு நிலம் கொடுத்த அந்த விவசாயிகள், அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தனர்.
பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், செருப்பை வீசி தாக்குதல் நடத்தினர். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.