கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமானநிலைய வான்வழி போக்குவரத்து சரக்கு பெட்டகத்துக்கு (Air Cargo) மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கொரியர் பார்சல் வந்துள்ளது.
அதை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில், ஏதோ துகள்கள் இருப்பது தெரியவந்தது. அது சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார். அதனுள்ளே திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.
சந்தேகம் வலுத்ததால், இரண்டுபக்கமும் ஒட்டப்பட்ட திருமண அழைப்பிதழ் அட்டைகளைக் கிழித்துப் பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வெள்ளை நிறத்தில் பவுடர் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பரிசோதனையில், அந்த பவுடர் மருத்துவத்துறையில் மருத்துவர்கள் கவனத்துடன் கையாளும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்தது. மருத்துவத் துறையில் ஆஸ்துமா சிகிச்சையிலும் மயக்க மருந்தாகவும் எபெட்ரின் பயன்படுத்தப்படுகிறது.
அந்த மருந்தை, போதை பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக திருமண அழைப்பிதழ் அட்டைகளுக்குள் மறைத்து அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நூதன கடத்தல் குறித்து கெம்பேகவுடா விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“திருமண அழைப்பிதழ் அட்டையில் தனி லேயர் உருவாக்கி, அதனுள் சிறிய பிளாஸ்டிக் கவரில் எபெட்ரினை மறைத்து வைத்து ஒட்டியுள்ளனர்.
43 அழைப்பிதழ் அட்டைகளில் 86 பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 5 கிலோ எடையுள்ள, இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும். மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அது அனுப்பப்பட இருந்தது.
அழைப்பிதழை வடிவமைத்த அச்சகத்தையும் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.