
கொரோனா பரவல் குறித்து இப்போது பல வகைகளிலும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. கண்ட இடங்களில் எச்சில் துப்பாதீர்கள், தரையில் எச்சில் துப்பப் பட்டிருந்தால் அதை மிதிக்காதீர்கள்; பொது இடங்களில் கையால் எதையும் தொடாதீர்கள்; வீட்டுக்குள் வந்ததும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள், கால்களையும் கழுவி, உடைகளை தனியே எடுத்து வையுங்கள் என்றெல்லாம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
மேலும், கடைகளில் விலகி இருங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொழுது போகாமல் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடுதல், தாயம் உருட்டி விளையாடுதல் போன்றவற்றால் ஒருவர் தொட்டு பயன்படுத்திய அதே பொருளை மற்றவரும் தொட்டு, அதன் மூலம் கிருமிகள் பரவி, சமூகப் பரவலை வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் வெளியிட்ட வீடியோவில், ‛‛கிருஷ்ணா லங்காவில் டிரக் ஓட்டுநர் ஒருவர் பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அமர்ந்து சீட்டு விளையாடியுள்ளார். அவர்களின் குழு அருகே பெண்களும் குழுவாக அமர்ந்து தாயம் விளையாடியுள்ளனர்.
அந்த ஓட்டுநருக்கு ஏற்கெனவே கொரோனா இருந்துள்ளது. அவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கும் கொரோனா பரவியுள்ளது.
அதேபோல் கார்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் ஓட்டுநர் ஒருவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியது. இதனால், கடந்த 2 நாட்களில் நகரில் சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாததும், தூய்மையாக இல்லாததுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.


