உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கர்ணன், இந்த தினத்தில் வித்தியாசமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக பதவி ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறைத் தண்டனை பெற்ற முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற சாதனையுடன், தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனவும் பெயர் கிடைத்துள்ளது நீதிபதி கர்ணனுக்கு.
‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக உள்ளார் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர். சில மாதங்களுக்கு முன், சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்ததையொட்டி, உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்ததில், நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக் காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து, நீதிபதி கர்ணனைத் தேடும் பணி மீண்டும் முடுக்கி விடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.