கேரளத்தில் கர்ப்பிணி யானை ஒன்று மரணித்த சோகம் அடங்குவதற்குள், மற்றொரு பெண் யானையும் வாயில் காயத்துடன் மரணம் அடைந்துள்ளது.
கேரளாவில் பெண் யானை ஒன்று, வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தைச் சாப்பிட முயன்று கடந்த வாரம் உயிரிழந்தது. இது சுற்றுச்சூழல், விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, மூவரைப் பிடித்து வைத்து விசாரித்தனர். அவர்களில் இருவரைக் கைது செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த மாதம் கொல்லத்தில் இதேபோல் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மற்றொரு பெண் யானையும் உயிரிழந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் பதானபுரம் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று வாயில் கடுமையான காயத்துடன் சுற்றி வந்துள்ளது. யானைக் கூட்டத்துடன் சேராமல் தனியே தனக்குள் பெரும் வலியுடன் சுற்றி வந்த அந்த யானை, கடந்த மாத இறுதியில் இறந்து போனது. இதைத் தொடர்ந்து பதானபுரம் வனச்சரக அதிகாரிகள் அதன் வாய்ப் பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த யானையும் வெடிவைக்கப்பட்ட பழத்தையோ அல்லது வெடிமருந்து வைக்கப்பட்ட வேலியையோ தொட்டு இது போன்ற பிரச்னைக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. இதை அடுத்து, அதன் உடற்கூறு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பதானபுரம் யானைக்கும் வெடி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் இதற்கும் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.