இந்தியாவில் கொரோனா தொற்றை பற்றிய மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள பி.எம். பார்கவா அறக்கட்டளை, மனித உரிமை அமைப்பான அன்காட் இணைந்து சமூகவியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சுர்ஜித் சிங், பி.வி.எஸ். குமார் மற்றும் சமூக ஆர்வலர் லீனா தபீரு, தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கவுகர் ரஜா சமர்பித்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 30 சதவீதத்தினர் மட்டுமே கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளனர்.
ஆனால், 42 சதவீதத்தினர் இயற்கையாகவே உருவானதாக நம்புகின்றனர். மேலும், ஊரடங்கு குறித்த கேள்விக்கு பதில் கூறும் போது, 54 சதவீதத்தினர் தொற்றை சமாளிக்க உதவியதாகவும் 30 சதவீதத்தினர் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இவர்களில் 5ல் ஒரு பகுதியினர் வேலை, வருவாயை இழந்து விட்டதாகவும், 3 சதவீதத்தினர் பசி, பட்டினி பிரச்னையை எதிர் கொண்டதாகவும் தெரிவித்தனர். சமூக விலகல் தொடர்பான கேள்விக்கு 10ல் 7 பேர் வைரஸ் பரவலைத் தடுக்கும் என்றும், 18 சதவீதத்தினர் தொற்றை ஒழிக்கும் எனவும் கூறினர். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.