ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி வரி; புரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரியா? ரொட்டி புரோட்டா இல்லியா? என்று பரோட்டாவுக்கு ஆதரவாக நேற்று டிவிட்டர் பதிவுகளில் பொங்கித் தள்ளிவிட்டார்கள் மக்கள். பெரும்பாலான பதிவுகள் கேரளத்தில் இருந்தே ட்ரெண்ட் ஆகின.
பரோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் #HandsOffPorotta ஹேஸ்டேக் நேற்று ட்ரெண்ட் ஆனது.
தென் இந்திய மாநிலங்களில் புரோட்டா இப்போது அதிகம் பேரால் உண்ணப்படுவது. கேரளத்தில் பிரபலமான ஒன்று. கடைகோடி கிராமங்களில் உள்ள ஓட்டல்கள் முதல் மாநகர ஸ்டார் ஓட்டல்கள் வரை புரோட்டா ஒரு ஸ்பெஷல் ஐட்டம். என்னதான் மைதா மாவு உடலுக்கு நல்லதல்ல, புரோட்டா தயாரிப்பில் ஈடுபடுத்தப் படும் எண்ணெய், மைதா உண்டால் அதிக அளவில் இதய நோய் ஏற்படும், செரிமானக் கோளாறுகள் கண்டு வயிற்று நோய் வரும் என்றெல்லாம் ஆய்வுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டாலும் அதை எல்லாம் மக்கள் எவரும் கண்டுகொள்வதில்லை காரணம் புரோட்டா சுவையின் மீதுள்ள விருப்பம்தான்!
இந்நிலையில் புரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது தற்போது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி., புரோட்டாவுக்கு மட்டும் 18% வரி ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த ‘ஐடி பிரெஷ் ஃபுட் என்ற நிறுவனம், ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரணை செய்யும் Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், ரொட்டிக்கு 5% வரி எனும்போது அதே பிரிவு உணவு வகையான புரோட்டாவுக்கு 18% வரி ஏன்? எனக் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பான விசாரணையின் தீர்ப்பில் புரோட்டா உயர்தர உணவு வகைகளில் வருவதாகவும், இது சப்பாத்தி, ரொட்டி வகையில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டக்களை 4-5 நாட்கள் வைத்திருந்து பின்னர் சூடு செய்தும் சாப்பிடலாம் என்பதால் அதற்கு வரி அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் புரோட்டா, ட்விட்டரில் ட்ரெண்டானது. #HandsOffPorotta என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்த புரோட்டா பிரியர்கள், தாங்கள் புரோட்டா சாப்பிட்ட படங்களைப் பதிவிட்டு புரோட்டா மீதுள்ள தங்களின் பிரியத்தை வெளிப்படுத்தினர்.