கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக் காலத்திற்கு முன்பாக கோயம்பேடு மார்க்கெட்டை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை – கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து சென்றவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் மார்க்கெட் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் பழக்கடைகள் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டன.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் காய்கறிகளும் பழங்களும் வருவது வழக்கம்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும், கேரளா, கர்நாடகாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனை ஒட்டி விவசாயிகள் அறுவடையை தொடங்கி உள்ளனர்.
மழைக் காலத்திற்கு முன்பாக காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருமழிசை காற்கறி மார்க்கெட் சிறியது என்பதால் அங்கே கொண்டுவரப்படும் காய்கறிகள் வைக்க இடமின்றி அழுகிவிடும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு கோயம்பேடு மார்க்கெட்டை தூய்மைப்படுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.