![திருப்பதி: இலவச டோக்கனுக்காக நீண்ட வரிசையில் மக்கள்! 1 thirupathi](https://dhinasari.com/wp-content/uploads/2020/06/thirupathi-2-1.jpg)
திருப்பதியில் இலவச டோக்கன் பெறுவதற்காக பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
முதலில் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன்களும், 3,000 சிறப்பு தரிசன டிக்கெட்களும் (ரூ.300) விநியோகம் செய்யப்பட்டது. இதில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய3 இடங்களில் 18 மையங்களில் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்போது தினமும் 6,000 இலவச தரிசன டோக்கன்களும் 9 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைன் மூலமும் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்புதரிசன டிக்கெட்கள் வரும் 30-ம்தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு விட்டது. இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் விநியோகம் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று ஏழுமலையானை தரிசிக்க நேற்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் பக்தர்கள் அதிகாலை4 மணி முதலே டோக்கன் விநியோக மையங்கள் முன் ஆதார்அட்டைகளுடன் குடும்பம், குடும்பமாக சமூக இடைவெளியுடன் காத்திருந்தனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன.