பஞ்சாபில் 15 வயது சிறுவன், பப்ஜி விளையாடுவதற்காக தனது தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் ரூ. 2 லட்சத்தை செலவழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. அவர்கள் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு என்பதை தாண்டி, அவர்கள் அதில் மூழ்கி விடுகின்றனர். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி விளையாட்டுக்காக தனது தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் 2 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.
அந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் முதல்தான் பப்ஜி விளையாட ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், செயலியை அப்கிரேட் செய்வதற்காகவும், அதில் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கும் என அதிக பணத்தை செலவழிக்க ஆரம்பித்துள்ளார். இதற்காக கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ. 55,000 செலவழித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பப்ஜியில் Unknown Cash பெறுவதற்காக Paytm பயன்படுத்தியுள்ளார். அதுவும் தனது தாத்தா பெயரிலேயே அந்தக் கணக்கை உருவாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கை குடும்பத்தினர் சோதனை செய்த போது பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறுதியில் சிறுவனிடம் விசாரித்த போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனிடையே சிறுவனுக்கு இதுபோன்ற மோசடிகளை கற்றுக் கொடுத்த இளைஞர் ஒருவர் மீது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டு தொடர்பாக அந்த இளைஞருக்கு சிறிது பணம் அனுப்பியதாகவும் சிறுவன் கூறியுள்ளார்.
முன்னதாக பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாடுவதற்காக தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 16 லட்சம் செலவு செய்தது தெரியவந்தது. இந்தப் பணம் மருத்துவ செலவுக்காக சேமித்து வைத்திருந்தது என பெற்றோர் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.