
புது தில்லி:
அமர்நாத் சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு மோடியின் கொள்கைகள்தான் காரணம் என்று டிவிட்டரில் கூறியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது இரு தினங்களுக்கு முன் இரவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் உயிரிழந்தனர். உளவுத் துறை இதுபோன்ற தாக்குதல் நடத்தப் படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தும், தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டரில் இதற்கு மோடியின் கொள்கைகளே காரணம் என்று கூறியுள்ளார்.
மோடியின் கொள்கைதான் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடமளித்துள்ளது. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வியூக தோல்வி. தனது குறுகிய கால அரசியல் வளர்ச்சிக்காக பிடிபி உடனான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட மோடியால், இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பாவி இந்திய மக்கள் சிந்தும் ரத்தம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சமம் என விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி.
அமர்நாத் யாத்திரை தாக்குதல் நடந்த போது டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட தகவலில் இது மிகப்பெரிய மற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாத பாதுகாப்பு குறைபாடு, இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும், இவ்வாறு மீண்டும் நடக்க அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டு இருந்தார்.
Modi’s policies have created space for terrorists in Kashmir. Grave strategic blow for India#AmarnathTerrorAttack
— Office of RG (@OfficeOfRG) July 12, 2017


