பெற்றோர் பார்த்துவைத்த பெண் மற்றும் காதலி என இரண்டு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்.
மத்தியப் பிரதேசத்தின் கெரியா என்ற கிராமத்தில் வசித்துவருபவர் சந்தீப். அவர் போபாலில் படித்தபோது ஹோஷங்காபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், அவர்களது திருமணத்திற்கு சந்தீப்பின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், தாங்கள் பார்த்துவைத்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என சந்தீப்பை அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சந்தீப் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை, கெரியா கிராம பஞ்சாயத்துவரை சென்றதில், இதுகுறித்து விசாரித்துள்ளனர் பஞ்சாயத்து தலைவர்கள். பின்னர், மூன்று குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், சந்தீப்பை இரண்டு பெண்களுக்குமே திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர்.
இரண்டு பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கெரியா கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், ஊர் மக்கள் முன்னிலையில், கடந்த 8ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நகர்ப்புற அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே திருமணம் நடத்தவேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், சந்தீப்பின் திருமணத்திற்கு அவ்வாறு எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என்று அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தீப்பின் திருமணம் குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.