
- மதனப்பல்லியில் ஏரில் பூட்டப்பட்ட காளைகளாக மாறிய சிறுமிகள்.
- மனம் வருந்தி உதவிக்கு வந்த நடிகர் சோனுசூட்.
பிரபல திரைப்பட நடிகர் சோனுசூட் மீண்டும் ஒரு முறை தன் பெரிய மனதை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஏழை விவசாயிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சிரமத்துக்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல நடிகர் சோனுசூட் நாடெங்கும் பாராட்டப்பட்டார். அண்மையில் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தை அரவணைக்க முன்வந்தார்.
தந்தையின் விவசாயப் பணிகளில் உதவி செய்வதற்காக ஏரில் பூட்டப்பட்ட எருதுகளைப் போல் மாறிய மகள்களை வீடியோவில் பார்த்த நடிகர் மனம் வருந்தினார். அந்தக் குடும்பத்திற்கு ஒரு ட்ராக்டர் அனுப்புவதாக தெரிவித்தார். மாலைக்குள் டிராக்டர் உங்கள் வயலை உழும் என்று அந்த விவசாயிக்கு நம்பிக்கை அளித்தார். அதன்படியே ஞாயிறன்று சொன்னபடி செய்தார்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபல்லியைச் சேர்ந்த தக்காளி விவசாயி தன் வயலை உழுவதற்கு காளைகள் இல்லாமல் மிகவும் கஷ்டத்திற்கு ஆளானார். கொரோனா சீசன் ஆவதால் வயல் வேலைகள் தொடங்க முடியாமலும் உழுவதற்கு எருதுகள் இல்லாமலும் டிராக்டர் கொண்டு உழுவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டார். அந்தத் தருணத்தில் அவர் பெற்ற மகள்களே ஏரை இழுத்து தந்தைக்கு உதவ முன் வந்தார்கள். அவர்கள் இருவரும் ஏர் பிடித்து இழுப்பதும் பின்னாலிருந்து விவசாயியும் அவர் மனைவியும் விதை தெளிப்பதுமாக பணிசெய்து வந்தனர்.

இது ஒரு பத்திரிக்கையாளரின் கேமரா கண்களில் பட்டதால் அதை அவர் டுவிட்டரில் அப்லோடு செய்தார். இந்த வீடியோ வைரல் ஆனது. சோனுசூட் அதைப் பார்க்க நேர்ந்தது. உடனே உதவி செய்வதற்கு அவர் முன்னுக்கு வந்தார்.
முதலில் அந்த விவசாயிக்கு ஒரு ஜோடி எருதுகளை அனுப்புவேன் என்று ட்விட்டரில் தெரிவித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் எருதுகள் வேண்டாம். அவர்கள் டிராக்டர் உபயோகிப்பதற்கு அருகதை உள்ளவர்கள் என்று ட்வீட் செய்தார்.
“காலைக்குள் அவருடைய வயலில் ஒரு ஜோடி எருதுகள் இருக்கும். இனிமேல் அந்தப் பெண்கள் தம் படிப்பின் மீது கவனம் செலுத்தலாம் . நாளை காலையில் இருந்தே இரண்டு எருதுகள் அவருடைய வயலை உழும். விவசாயி நம் தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்” என்று சோமுசூட் ட்விட்டர் செய்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் “அந்த குடும்பத்திற்கு ஒரு ஜோடி மாடுகள் தேவை இல்லை. அவர்கள் ஒரு டிராக்டர் அடைவதற்கு முழுவதும் தகுதியுள்ளவர்கள். அதனால் இவர்களுக்காக ஒரு ட்ராக்டர் அனுப்பப் போகிறேன். மாலைக்குள் அந்த டிராக்டர் உங்கள் வயலை உழும்” என்று டிவிட்டரில் உறுதிசெய்தார்.
மொத்தத்தில் தன் பெரிய மனதை வெளிப்படுத்தி தான் நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோ என்று நிரூபித்துள்ளார். அந்தப் பெண்கள் வயலை உழும் வீடியோ வைரலாகி யுள்ளது. அதோடு அவர்களுக்கு டிராக்டர் அனுப்பி, அது வயலில் வந்து நிற்கும் போட்டோவும் வைரலாகி வருகின்றன.
இதனிடையே, ஏர் உழும் சிறுமிகளின் விவசாயி குடும்பத்திற்கு சோனுசூட் டிராக்டர் வாங்கித்தந்த வள்ளமையை சந்திரபாபு நாயுடு புகழ்ந்துரைத்தார். தன் கட்சி அந்தப் பெண்களின் படிப்புக்கு உதவும் என்று உறுதியளித்தார்.
- செய்தி : ராஜிரகுநாதன், ஹைதராபாத்



