மத்தியப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக., பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர்ந்த இமார்தி தேவி என்பவருக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிட பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கமல்நாத் பேசியபோது, இமார்தி தேவியை ஐட்டம் என்று சொல்லி.. கேனத்தனமாக சிரித்தார். அவரது சிரிப்பும், உள்நோக்கத்துடன் ஐட்டம் என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் பாஜக.,வில் சேர்ந்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக.,வின் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் ஆனார். காங்கிரஸார் ராஜினாமா செய்த தொகுதிகளில் நவ.,3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் காங்கிரஸில் இருந்து பாஜக.,விற்கு சென்ற முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவிக்கு இடைத்தேர்தலில் பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்நாத், ‛எங்கள் வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிரணியில் இருப்பவரைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஐட்டம் பெயரை நான் சொல்ல வேண்டுமா?’ என்று வினவினார்.
கமல்நாத்தின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேவலமாகப் பேசியதுடன், கேனத்தனமாக உள்நோக்கத்துடன் சிரித்த கமல்நாத்துக்கு டிவிட்டரில் பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.