விவசாயிகளை முகமூடியாக முன்னிறுத்தி, இந்திய எதிர்ப்பு அரசியலைச் செய்து, உள்நாட்டு விவகாரத்தில் கருத்துக் கூறிவரும் வெளிநாட்டு பிரபலங்களை கண்டித்து தில்லி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநில விவசாயிகள், மாநில அரசின் ஆதரவுடன் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் தூண்டுதலில் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தில், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சீன கம்யூனிஸ பிரிவினைவாதிகள் என பல்வேறு தரப்பும் புகுந்துவிட்டதால், போராட்டம் பெரும் வன்முறைத் தளத்தில் திசை மாறியிருக்கிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு வாழ் பிரபலங்கள் சிலர் டிவிட்டர் பதிவுகளின் வழியே, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல், இந்திய எதிர்ப்புக் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்தியாவில் பெரும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.
இதனிடையே இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. ஆயினும் இந்த அறிவிப்புக்கும் இந்தியாவில் சலசலப்பு எழுந்துள்ளது.
இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், செய்தியாளர்களிடம் பேசிய போது, அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு. இதைத் தான் இந்திய உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. எந்தப் பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும்.
இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை அமெரிக்கா வரவேற்கிறது.
விவசாயத் துறை சந்தையின் செயல்திறனை அதிகரிக்கும், அதிக அளவு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. அதுபோன்றே இந்தச் சட்டங்களும் அமைந்துள்ளன என்றுதெரிவித்திருக்கிறார்.
அதே நேரம், அமெரிக்கா கூறியுள்ள கருத்தை முழுமையாக கவனிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்தது.
இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறிய போது, அமெரிக்காவின் கருத்தை முழுமையாக கவனிக்க வேண்டும். எந்தப் போராட்டத்தையும் இந்திய ஜனநாயகத்தின் நடைமுறைகள் மற்றும் அரசியலுக்கு உட்பட்டே பார்க்க வேண்டும். தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக உரியவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்த வன்முறை எந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதே தாக்கம் விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் நடந்த வன்முறையும் ஏற்படுத்தியுள்ளது; அது உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு கையாளப்படும்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.