சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செஞ்சுரி அடித்து அசத்த, கடைசி விக்கெடுக்கு ஜோடி சேர்ந்து விளையாடிய மொகமத் சிராஜ், தானே செஞ்சுரி அடித்தது போல் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 134 ரன்களில் ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 25 ரன்னிலும், புஜாரா 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்றைய போட்டியில், புஜாரா 7 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 26 ரன்னிலும், ரிஷப் பன்ட் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அஜின்கியா ரகானே 10, அக்சர் படேல் 7 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி, 106 ரன்னில் முதல் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதானமாக விளையாடி, ரன்கள் சேர்த்தது. 7வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்த நிலையில், கோலி 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 202 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் அஸ்வின் நன்றாக விளையாட, அவருடன் இணைந்திருந்த குல்தீப் யாதவ் 3 ரன்னிலும் இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொகம்மத் சிராஜ், அஸ்வினுடன் இணைந்து தாக்குப் பிடித்து விளையாடினார். அஸ்வின் தொடர்ந்து நன்கு அடித்து ஆடி, 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 148 பந்தில் 106 ரன் எடுத்து சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து ஆடிய சிராஜ் 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன் எடுத்தது.
அஸ்வின் சதம் அடித்த போது, மொகம்மத் சிராஜ் துள்ளிக் குதித்து பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஸ்வின் சதத்துக்கு உறுதுணையாக இருந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியதாக டிவிட்டர்வாசிகள் அவரைப் புகழ்ந்து தள்ளினர்.