தீமாபுர் : நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த வங்கதேச ஊடுருவல்காரனை, சிறையை உடைத்து, வெளியே இழுத்து பொதுமக்களே அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர் சையத் பரீத்கான்(35). இவர், நாகாலாந்தில் கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்பூரில் பாதுகாப்பு நிறைந்த மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாலியல் பலாத்காரச் சம்பவத்தைக் கேள்விப் பட்ட நாகா பழங்குடியின மக்கள், சையத் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சையத்துக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். இதை அடுத்து, ஆயிரக்கணக்கில் அவர்கள் சிறை முன்னே திரண்டனர். தீமாபுர் மத்தியச் சிறையை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊரின் மையப் பகுதியில் வைத்து அடித்துக் கொன்றனர். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறையை உடைத்து ஆவேசம்: பாலியல் பலாத்கார குற்றவாளியான வங்கதேச ஊருவல்காரனை அடித்துக் கொன்ற மக்கள்
Popular Categories


