பொங்கி வழியும் சாக்கடை… காண்ட்ராக்டரை அமர்த்தி குப்பைகளை வாரி அவர்மீது தலையில் கொட்டிய எம்எல்ஏ வின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா எம்எல்ஏ அதிக உற்சாகத்தை காட்டி டிரைனேஜ் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்தவரை அழைத்து வந்து சாக்கடை நீரில் உட்கார வைத்த சம்பவம் மும்பையில் நடந்தது. பகிரங்கமாக காண்ட்ராக்டருக்கு தண்டனை விதித்த மக்கள் பிரதிநிதியின் செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆளும் கட்சி எம்எல்ஏ., தான் செய்த செயல் நல்ல செயல் என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டுள்ளார்.
துப்புரவு பணிகளை காண்ட்ராக்ட் எடுத்துக் கொண்ட பின் அதனை சரியாக செய்யவில்லை என்ற பின்னணியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அந்த காண்ட்ராக்டரை சாக்கடையில் அமர வைத்து துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு சாக்கடையில் இருந்து குப்பைகளை வாரி அவர் மீது கொட்டினார். பகிரங்கமாக நடந்த இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.
சிவசேனா எம்எல்ஏ திலீப் லாண்டே செய்த இந்தச் செயல் விவாதத்திற்கு உட்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.
துப்புரவு கான்ட்ராக்டருக்கு பகிரங்கமாக தண்டனை விதித்தது குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக மும்பையில் பேய் மழை பெய்து வரும் நிலையில் பல சாக்கடைகள் பொங்கி வழிகின்றன. பல சாலைகளில் சாக்கடை நீர் நதி போல் ஓடுகிறது.
இதனால் கடுப்படைந்த கண்டிவலி சிவசேனா எம்எல்ஏ திலீப் லாண்டே சாலையில் ஓடும் சாக்கடை நீரில் அது தொடர்பான காண்ட்ராக்டரை அழைத்து உட்கார வைத்து துப்புரவுத் தொழிலாளர்களை கொண்டு சாக்கடையிலிருந்து எடுத்த குப்பைகளை அவர் மீது கொட்டினார். தான் செய்தது சரிதான் என்று கூறும் சிவசேனா எம்எல்ஏ, காண்ட்ராக்டர் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்று எரிந்து விழுந்தார்.
இந்த சம்பவத்தில் எம்எல்ஏ.,வின் நடத்தை குறித்து விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.
“இந்தப் பகுதி காண்ட்ராக்டர் தன் வேலையை சரியாகச் செய்யவில்லை. மக்கள் என் மீது உள்ள நம்பிக்கையால் என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால் என் கடமையைச் செய்வதற்காக சாக்கடையை சுத்தம் செய்வதற்காக உள்ளூர் தலைவர்களோடும் சிவசேனா தொண்டர்களோடும் இங்கு வந்தேன்.
சாக்கடை துப்புரவுப் பணிகளை காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்தோம். ஆனால் அவர் அதனை சரியாக செய்யவில்லை. அதற்காகத்தான் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நாங்களே வீதியில் இறங்கினோம். அவர் தன் பணியைச் செய்யாததால் இங்கு அழைத்து வந்து உட்கார வைத்து தலையில் குப்பையைக் கொட்டினோம்” என்று கூறினார்.
மும்பை கார்ப்பரேஷனில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா அதிகாரம்தான் நடந்து வருகிறது. இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.