தீமாபுர்: நாகாலாந்தில் பாலியல் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கைதியை பொதுமக்கள் சிறையை உடைத்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து அங்கே வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், கலவரத்தை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கலவர சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. மெரன் ஜாமீர் கூறியபோது… சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கியபோது, சிறைக் காவலர்களைவிட அவர்கள் அதிகம் பேர் இருந்தனர். மேலும், அவர்களுடன் பள்ளிச் சிறார்களும் இருந்ததால், அவர்களைத் தடுக்க முடியவில்லை. எனினும், அந்தக் கும்பலின் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கைந்து பேர் காயமடைந்தனர். அதில், படுகாயம் அடைந்த ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்றார்.

