
அகமதாபாத் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினரில் 7 பேர் கடந்த சில நாட்களில் இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகமதாபாத் புறநகர், அஸ்லாலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.எஸ்.கமேதி கூறியதாவது, ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 10 பேர் கடந்த 20ம் தேதி இரவு சிறிய அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் அறையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
சமையல் கேஸ் கசியும் வாசனையை உணர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியுள்ளார். அப்போது அவர்கள் மின் விளக்கு சுவிட்சைப் போட்ட போதுவீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டரும் வெடித்துள்ளது.
இதில் படுகாயம் அடைந்த 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 7 பேர் கடந்த சில தினங்களில் உயிரிழந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.