புது தில்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால்தான் மட்டுமே அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அருண் ஜேட்லி…. கறுப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரசாரத்தின் போது மோடி கூறினார். அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் என முதலில் 628 பேர் பட்டியல் வெளியானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி வரும் 31-ந் தேதிக்குள் முடிந்து விடும். கறுப்பு பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். அத்துடன் கறுப்பு பணம் உருவாவதையும் அதை வெளிநாட்டில் பதுக்குவதையும் தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்குவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். சிறப்புக் குழுவினரின் பரிந்துரைகளில் சில மத்திய பட்ஜெட் அறிவிப்பில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. மேலும் கறுப்புப் பண பதுக்கலை தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது… என்று கூறினார்.
கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால் மட்டுமே அந்த ரூ.15 லட்சம் : அருண் ஜேட்லி
Popular Categories


