புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது அதிருப்தி அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த சம்மன் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனாலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். என் தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். எந்த விதமான சட்ட விசாரணைக்கும் வெளிப்படையாக பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். வாய்மையே வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. மன்மோகன் சிங் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த 2005ம் ஆண்டு குமார்மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷாவின் தலபிரா நிலக்கரி சுரங்கம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மன்மோகன் சிங்குக்கு குமார்மங்கலம் பிர்லா 2 கடிதங்கள் மூலம் கேட்டுக்கொண்டதால் இந்த ஒதுக்கீடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மன்மோகன்சிங், தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பாரக் உள்ளிட்டோர், ஏப்ரல் மாதம் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்டதில் அதிருப்தியே; ஆனாலும் சட்டத்துக்கு மதிப்பளிக்கிறேன்: மன்மோகன் சிங்
Popular Categories


