புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில விதிமுறைகளை இயற்றியது. அதன்படி, ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தால் மட்டுமே, அவரை துணைவேந்தராக நியமிக்க முடியும். எனவே இதனை சுட்டிக்காட்டி கல்யாணி மதிவாணன் நியமனத்தை எதிர்த்து கெயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். கல்யாணி மதிவாணனை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறையை பல்கலைக்கழகம் கடைபிடிக்கவில்லை என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில், கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கல்யாணி மதிவாணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகத் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது பல்கலைக்கழகம்தான் என்றும், எனவே, பல்கலைக்கழகத்தின் தவறுக்கு துணைவேந்தர் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், யுஜிசி விதிப்படி கல்யாணி மதிவாணன் நியமனம் சரிதான் என்றும் நீதிபதி எஸ்ஜே முகோபாத்யாயா தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்
Published:

