புது தில்லி: பாஜக தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மாற்றியமைத்தார். புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை தில்லியில் அவர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ்,வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, வருண் காந்தி உள்ளிட்ட 111 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி, வி.சண்முகநாதன் ஆகியோர் தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பலரும் செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர். எனினும், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினி ஆகியோர் புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெறவில்லை. பாஜக ஆளும் 8 மாநிலங்களின் முதல்வர்கள், 2 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 27 பேர் நிரந்தர அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 40 மூத்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், எம்.பி. சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய இணை அமைச்சரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படப் பாடகருமான பாபுல் சுப்ரியோ, திரைப்பட நடிகையும் எம்.பி.யுமான கிரண் கெர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் புதிய தேசிய செயற்குழு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூரில் கூடுகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக., செயற்குழு: மாற்றியமைத்தார் அமித் ஷா
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

