நாகபுரி: ஒரு நாகரிக சமுதாயத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் போன்ற செயல்களுக்கு இடமில்லை, அதை ஆர்.எஸ்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்கு உரியவை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு, அங்கே உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதில்லை. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக் குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பி வந்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகின்றன. அவர்கள், இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஹரியானா மாநில பாஜக அரசு, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் தடை விதிக்க வேண்டும். பசுவதைத் தடைச் சட்டம் பேச்சளவில் இருந்தால் மட்டும் போதாது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி.
நாகரிக சமுதாயத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் கண்டிக்கத்தக்கது: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

