பெண்களின் நிறம் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்காத சரத் யாதவுக்கு ஸ்மிருதி இராணி கண்டனம்

Published:

புது தில்லி: தென்னிந்திய பெண்களின் தோல் நிறம் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். இதற்கு அவையில் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெண்களின் நிறம் குறித்த சரத்யாதவ் கருத்தில் இருந்து தான் விலகி இருக்க விரும்புவதாகவும், மேலும் அவர் தனது கருத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கு சரத் யாதவ், நான் பேசியது போன்ற பெண்கள்தான் (கருப்பு நிறம்) இந்தியாவிலும், இந்த உலகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்காக ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் போராடினார்கள். எனவே இந்தப் பிரச்னை குறித்து யாருடனும் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்றார். அவர் இவ்வாறு தெரிவித்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘‘பெண்களின் தோலின் நிறம் குறித்து இவ்வாறு பேசாதீர்கள். அது தவறான தகவலை தெரிவிப்பதாக அமைந்துவிடும்’’ என்றார். அதற்கு சரத்யாதவ், ‘‘நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார். இதை அடுத்து அவைத்தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, இந்த பிரச்னை குறித்து மேலும் விவாதிக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தில்லி மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், இந்தியர்கள் வெள்ளைத் தோல் மீது மோகம் கொண்டவர்கள் என்றும், திருமணத்துக்காக வெள்ளைத்தோல் கொண்ட பெண்களையே தேடுவதாகவும் கூறினார். அத்துடன், தென்னிந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள், நாட்டியத் திறமை கொண்டவர்கள் என்ற போதிலும் சிவந்த நிறமாகப் படைக்கப்படவில்லை என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தான் கூறிய அனைத்தும் நகைச்சுவைக்காக கூறப்பட்டவை என்று சரத்யாதவ் விளக்கம் அளித்தார். இருந்தபோதும் சரத்யாதவின் பேச்சு பின்னர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img